திகம்பர் பாட்கேயை பயம் ஆட்கொண்டு விட்டது.இப்போது அந்த அறை அவருக்கு ஒரு பொறியாகப்பட்டது ( TRAP ) ;
அந்த ஒற்றைக்கண்ணனைத் தாண்டி உள்ளே சென்றால் ,உயிரோடு வெளியே வரமுடியாது என்று எண்ணம் அவரை ஆட்கொண்டு விட்டது.
‘’ நான் காந்தி மீது வெட்டவெளி கூட்டத்தில்,அவர் முன்புறமாக இருந்துவேண்டுமானால் தாக்குதல் நடத்துகிறேன் உள்ளே போகச் சொல்லாதீர்கள்’’ என்று ஆப்தேயிடமும்,நாதுராமிடமும் கெஞ்சத் தொடங்கினார்.
பயப்படுவதற்கு ஒன்றுமில்லை,தங்கள் திட்டம் பிழையேற்படுத்தாதது ( FOOL PROOF ) என்று பாட்கேயிடம் அவர்கள் எடுத்துக் கூறினார்கள்.
ஆனால் என்ன சொன்னாலும்,பாட்கே மனதை மாற்றிக் கொள்வதாய் இல்லை.
நேரம் வேறு ஓடிக்கொண்டிருந்தது.
ஏற்கெனவே காந்தி பிரார்த்தனைக் கூட்டத்திற்கு வந்து விட்டார்.
பிரார்த்தனை தொடங்குவதற்கு முன்பு இளம் பெண்கள் வழக்கமாக எழுப்பும் ரீங்கார ஓசை கேட்கத் தொடங்கி விட்டது.
காந்தியின் பிரார்த்தனைக்கூட்டங்கள் வழக்கமாக 25 நிமிடங்களுக்கு மேல் நீடிப்பதில்லை.
அந்திச் சூரியன் சாயும் நேரம்.இன்னும் சில நிமிடங்கள் கழிந்து விட்டால் இருள் சூழத்தொடங்கி விடும்.
அந்த இருட்டில்,தெளிவாகப் பார்க்க முடியாது.
இந்த நிலையில்,பாட்கேயிற்கு விட்டுக் கொடுப்பதை தவிர ஆப்தேயிற்கும் நாதுராமிற்கும் வேறு வழித் தெரியவில்லை.
ஆனால்,உண்மையில்,காந்தியை கொல்லும் எண்ணத்தையே பாட்கே கைவிட்டு விட்டார்.
காந்தியை கொல்லும் சதியில் பங்கேற்றவர்,இப்போது ‘ COUNTDOWN ‘ தொடங்கும் போது கைவிரிக்கத் தொடங்கி விட்டார்.
அவர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது.
வீராவேசமாக காரியத்தில் ஈடுபடத் தொடங்கியவர்,இப்போது பயத்தின் காரணமாக உறைந்து போனார்.
ஆனால் சோட்டு ராமின் அறை எண் 3ன் வாயிலில் கட்டிலில் அமர்ந்திருந்த அந்த ஒற்றைக்கண்ணன்தான் காந்திக்கு இன்னும் 10 நாளைக்கு ஆயுளை நீட்டித்து கொடுத்ததாக எண்ணிவிட வேண்டாம்.
திட்டப்படி பாட்கே காந்தியை கொல்ல அந்த அறைக்குள் சென்றிருந்தாலும்,அந்த அறையின் ஜாலி வழியாக காந்தியை சுட்டிருக்க முடியாது.
மாற்று திட்டத்தை விளக்க என்ற போர்வையில்,ஷங்கர் கிஷ்டய்யாவை அழைத்துக் கொண்டு,தாங்கள் வந்த டாக்ஸி நின்ற இடத்திற்கு பாட்கே சென்றார்.
சற்றே பதற்றத்துடன் மற்றவர்கள் பிரார்த்தனைக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த தோட்டத்திற்குள் செல்லத் தொடங்கினார்கள்.
டாக்ஸி டிரைவர் அங்கே இல்லை.
நல்லதாகப் போயிற்று என்று நினைத்த பாட்கே,
தன்னுடைய மற்றும் ஷங்கர் கிஷ்டய்யாவிடம் கொடுத்திருந்த ரிவால்வர் என இரண்டையும்,தன் தோளிலே போட்டிருந்த துண்டில் வைத்து சுற்றினார் .
மூட்டையாக கட்டப்பட்ட ரிவால்வர்களை டாக்ஸியில் பின் இருக்கையில் வைத்தார்.
தான் வைத்திருந்த கையெறி குண்டை ஷங்கர் கிஷ்டய்யாவிடன் கொடுத்து ,தான் கூறும்வரை அதை எதுவும் செய்யக்கூடாது என்று அவருக்கு அறிவுறுத்தினார்.
இரண்டு கை விரல்களையும் முஷ்டியாக மடக்கி தன் நேரு சட்டை இரு புற பாக்கெட்டுகளுக்குள்ளும் வைத்துக் கொண்டார்.
ஏதோ ரிவால்வரையும் ,கையெறி குண்டையும் தான் வைத்திருப்பது போல ,ஆப்தேயிற்கும் மற்றவர்களுக்கும் தோற்றம் அளிக்கவே இந்த ஏற்பாடு.
ஷங்கர் கிஷ்டய்யாவுடன் மீண்டும் தோட்டத்திற்குள் நுழைந்தார்.
கையில் எந்த ஆயுதமும் கொண்டு வராத நிலையில்,ஆப்தேயிடம் அவர் சென்றார்.
பாட்கே தயாராக இருக்கிறாரா என ஆப்தே கேட்க ‘’ ஆம் ‘’ என்று தலையசைத்தார் பாட்கே.
பின்னாளில் தன் வாக்குமூலத்தில் பாட்கே கூறுகையில்,
‘’ நான் தயாராக இருப்பதாக ஆப்தேயிடம் கூறி விட்டு பிரார்த்தனை நடக்கும் இடத்தை நோக்கி நடந்தேன்.ஆப்தே மதன்லால் பஹ்வாவின் தோளின் மீது கையை வைத்து ‘’ சலோ ‘’என்று கூறியதைக் கேட்டேன்.
இப்படியாக மதன்லால் பஹ்வா பலி கொடுக்கப்பட்டு விட்டார்.
( தொடரும் )