பாஜக., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக மாறும்’ என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காங்கிரஸ் எம்.பி., சசிதரூருக்கு எதிராக கோல்கட்டா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நேற்று ‘கைது வாரன்ட்’ பிறப்பித்துள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். வரன்முறையின்றி பேசுபவர்! பல்வேறு சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்பவர்.
காஷ்மீர் விவகாரம் குறித்து தற்போது காங்கிரஸ் தலைவர்கள் மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர். அவர்களில் ஒருவராக சசிதரூரும் பேசிவருகிறார். இருப்பினும் இப்போது அவரது பழைய பேச்சுக்காக பிரச்னை எழுந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரான இவர், கடந்த ஆண்டு ஜூலையில், திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது, ‘2019-ஆம் ஆண்டு நடக்க உள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, பாஜக., மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா ஹிந்து பாகிஸ்தானாக மாறும்’ என்றார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சசிதரூரின் பேச்சுக்கு பாஜக., கண்டனம் தெரிவித்தது. அவர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியது. ஆனால் சசிதரூர் மறுத்துவிட்டார்.
இதை அடுத்து கோல்கட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சசி தரூருக்கு எதிராக வழக்கறிஞர் சுமித் சௌத்ரி ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில், ‘சசிதரூரின் கருத்து மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்தை அவமதிக்கும் வகையில் உள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார்.
இந்த மனு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி சசி தரூருக்கு சம்மன்கள் அனுப்பப் பட்ட நிலையில் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் தாஸ்குப்தா, சசிதரூருக்கு கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.