ஆகஸ்ட் 25 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். இதில், சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட்களில் ஒகுஹாராவை தோற்கடித்து, தங்கம் வென்றார். இதன்மூலம், உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வென்று சாதனை படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார்.
இன்று இந்தியா திரும்பிய பி.வி.சிந்து, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்ததை தொடர்ந்து பிரதமரை அவர் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, சிந்துவின் பயிற்சியாளர் கோபி சந்தும் உடனிருந்தார்.
முன்னதாக, விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவையும் சந்தித்து பி.வி.சிந்து வாழ்த்து பெற்றார். அப்போது, சிந்துவுக்கு ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் வழங்கினார்.
இந்தியாவுக்கு தங்கப்பதகத்தையும் பெரும் புகழையும் பி.வி.சிந்து ஈட்டி தந்துள்ளதாக பிரதமர் மோடி அவரை பாராட்டியுள்ளார். எதிர்காலத்தில் மேலும் பல போட்டிகளில் பி.வி.சிந்து வெற்றி பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வாழத்து தெரிவித்தார்.