
அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டின்(NRC) இறுதிப் பட்டியல் வெளியிடப் பட்டது. இதில் 19,06,657 பேரின் பெயர்கள் சேர்க்கப்படவில்லை! பெயர் விடுபட்டவர்களை வெளிநாட்டினவர் என உடனே அறிவிக்கமாட்டோம். அவர்கள் 120 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் உறுதி கூறியுள்ளது.
அசாமில் இறுதி செய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் 3,11,21,000 பேர் சட்டபூர்வ இந்தியக் குடிமக்களாக ஏற்கப்பட்டுள்ளனர். அசாமில் வசித்து வரும் 19 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டதை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தவிர்க்க, பாதுகாப்புக்காக ஆயிரக் கணக்கான துணை ராணுவப் படையினர் நிறுத்தப்பட்டனர். மாநிலம் முழுவதும் 60 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பதற்றமான பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் சட்டபூர்வ குடிமக்களை உறுதிப்படுத்தவும், வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்கும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப் படுகிறது.
அசாமைப் பொறுத்தவரை, வங்கதேச எல்லையில் இருப்பதால், அந்நாட்டில் இருந்து சட்டவிரோதமாக பலர் குடியேறியுள்ளனர். எனவே அசாமில் வசிக்கும் சட்டபூர்வ இந்திய குடிமக்களை அடையாளம் காணவும், அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வந்து சட்ட விரோதமாக குடியேறியவர்களை அடையாளம் கண்டு அகற்றவும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்படுகிறது.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு முதன் முதலில் 1951ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
1971 மார்ச் 25க்குப் பிறகு, வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் நுழைந்தவர்களை கண்டறிவதற்காக, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேசிய மக்கள் பதிவேடு புதுப்பிக்கப்பட்டு, இறுதி செய்யப்பட்டு இன்று வெளியானது.
இதற்காக விண்ணப்பங்கள் 2015 மே இறுதியில் தொடங்கி, 2015 ஆக.31 வரை பெறப்பட்டன. 3 கோடியே 30 லட்சத்து 27 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இந்த விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப் பட்டு, கடந்த ஆண்டு ஜூலை 30ல்

வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில், 2 கோடியே 89 லட்சத்து 83 ஆயிரத்து 677 பேர் சேர்க்கப்பட்டனர். அப்போது 40 லட்சத்து 70 ஆயிரத்து 707 பேர் இடம்பெறவில்லை.
கடந்த ஜூன் 26 அன்று இரண்டாவது முறையாக வரைவு பட்டியல் வெளியிடப்பட்டபோது, தகுதியற்றவர்கள் என மேலும் 1 லட்சத்து 2 ஆயிரத்து 462 பேர் நீக்கப்பட்டனர். ஆக, கடந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதியும், கடந்த ஜூன் 26ஆம் தேதியும் வரைவு பதிவேடு வெளியிடப்பட்டபோது, 41 லட்சத்து 10 ஆயிரத்து 169 பேர் இடம்பெறவில்லை.
அவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெற வாய்ப்பளிக்கப்பட்டது. 1951ல் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர் இடம்பெற்றிருப்பது, 1971ஆம் ஆண்டு மார்ச் வரையிலான வாக்காளர் பட்டியல்களில் பெயர் இடம்பெற்றிருப்பது ஆகியவை சட்டபூர்வ ஆவணங்களாக ஏற்கப்பட்டன.
ரூ.1220 கோடி செலவில் 5 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று, இறுதி செய்யப்பட்ட அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு இன்று வெளியிடப்பட்டது. இதில், 3 கோடியே 11 லட்சத்து 21 ஆயிரம் பேர் சட்டபூர்வ இந்திய குடிமக்களாக இடம்பெற்றுள்ளனர். அசாமில் தற்போது வசிக்கும் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பேர் இடம்பெறவில்லை.
அசாமில் இன்று வெளியிடப்பட்டிருப்பது இறுதி செய்யப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு என்றாலும், அதில் சேர்க்கப்படாத, 19 லட்சம் பேருக்கும் மேல்முறையீட்டு வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கான மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா தெரிவித்துள்ளார்.
இந்த சட்டபூர்வ வாய்ப்புகள் முடியும் வரை, தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாதவர்கள் வெளிநாட்டவர்கள் என அறிவிக்கப்பட மாட்டார்கள். பதிவேடு விவரங்களை www.nrcassam.nic.in தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் பட்டியல் வெளியானவுடனே, ஒரே நேரத்தில் கோடிக் கணக்கானோர் பார்க்க முயன்றதால் அந்த இணைய தளம் செயலிழந்தது. தங்களது பெயர்கள் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளதா என்பதைப் பார்க்க, என்ஆர்சி சேவை மையங்களிலும் மக்கள் திரண்டனர்.