தெலுங்கானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் மகளின் சடலத்தை தந்தை கையில் எடுத்து சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் பொத்தப்பள்ளி மாவட்டம் கூனுறு கிராமத்தை சேர்ந்தவர் சம்பத். இவருடைய 7 வயது மகள் கோமளா. சிறுமிக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.
அவரின் சிகிச்சைக்காக கரீம் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சம்பத் கொண்டு வந்து சேர்த்தார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி உயிரிழந்தார்.
கையில் பணமில்லை, அதனால் மருத்துவமனை சார்பில் சொந்த ஊருக்கு தனது மகளின் சடலத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஏற்படுத்தித் தருமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் சம்பத் கேட்டார். ஆனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் தங்களிடம் ஆம்புலன்ஸ் வசதி இல்லை என தெரிவித்தனர்.
இதனால் இன்று நீண்ட நேரம் மருத்துவமனையிலேயே அமர்ந்ததிருந்தார் சம்பத், பின் செய்வதறியாது கையிலேயே கோமளாவை சுமந்தபடி கண்ணீருடன் நடந்தே சென்றார். மருத்துவமனைக்கு வெளியே வந்தார் அப்பொழுது அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்களிடம் தன் நிலைமையை கூறினார்
அதற்கு பலர் ஒத்துக்கொள்ளவில்லை இந்நிலையில் ஒரு ஆட்டோ டிரைவர் மட்டும் ஒப்புக் கொண்டு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு சம்பத்தை சொந்த ஊரில் விட்டு வந்தார். இந்த சம்பவம் அங்குள்ளோரை கண்கலங்க வைத்தது.
தெலுங்கானா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஈட்டல ராஜேந்திரனின் சொந்த மாவட்டம் இந்த பொத்தப்பள்ளி.