உங்கள் பின் இந்தியா நிற்கிறது; இனி மிகச் சிறப்பானவை நிகழும்: பிரதமர் மோடி!

Published:

modi isro - 2026

சந்திரயான் – 2 விக்ரம் லேண்டர் எதிர்பார்த்தபடி, நிலவின் தென் பகுதியில் இறங்குவதில் பிரச்னை ஏற்பட்டு, 2.1 கி.மீ., முன்னதாக தொடர்பை இழந்தது. இருப்பினும், இந்த திட்டம் தோல்வி அல்ல என்றும், இதனுடன் அனுப்பப் பட்ட ஆர்பிட்டர் எதிர்பார்த்தபடி நிலவைச் சுற்றி வந்து நிலவின் மேல் பரப்பில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் என்றும் இஸ்ரோ அறிவித்தது.

இந்நிலையில், இன்று காலை 8 மணி அளவில் மீண்டும் இஸ்ரோ மையத்துக்கு வந்திருந்த பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் பேசினார்!

அப்போது அவர், பாரதமாதாவின் கனவுகளை நிறைவேற்ற பலர் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்துள்ளனர். நீங்கள் இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு முன்னேற்றம் காணச் செய்வதில் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளீர்கள்.

modi isro2 - 2026

நேற்று இரவு திட்டமிட்ட படி நடக்காமல் போனதாக வெளியான அறிவிப்பைப் பார்த்ததும், உங்களுடைய மன நிலையை நான் புரிந்து கொண்டேன். உங்கள் கண்கள் அதனை வெளிப்படுத்தின. ஏற்கெனவே மன வருத்தத்தில் இருந்த உங்களை ஏதாவது பேசி மீண்டும் சோகத்தில் ஆழ்த்த விரும்பவில்லை. அந்த இரவு நீங்கள் உங்கள் எண்ணங்களை அசைபோட்டு சற்று மீண்டு வரட்டும் என்று நினைத்து, மீண்டும் காலையில் உங்களுடன் பேசலாம் என்பதற்காகவே நேற்று உடனே நான் சென்றுவிட்டேன்.

பல இரவுகளாக நீங்கள் தூங்கவில்லை என்பது எனக்குத் தெரியும்! இருப்பினும், உங்களுடன் இன்று காலை மீண்டும் பேச விரும்பினேன். மிகுந்த நம்பிக்கையுடன் முன்னேறிய நிலையில் திடீரென மறைந்துவிட்டது. இந்த கணத்தை உங்களுடன் நானும் இருந்து அனுபவித்தேன். ஏன் நடந்தது எப்படி நடந்தது என்ற கேள்வி எழுந்தது

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

ஒவ்வொரு கணமும் நீங்கள் உழைத்தபடி, முன்னேறிக் கொண்டிருந்தீர்கள். நமக்கு ஏற்படும் சிறு இடையூறுகளால் நாம் நமது இலக்கில் இருந்து பின்வாங்க மாட்டோம்.

நிலவைப் பற்றி எழுதும் கவிஞர்கள் காதல் ரசம் சொட்ட எழுதுவார்கள். நாம் நிலவைக் கட்டியணைக்கச் சென்றோம். நிலவைக் கைப்பற்ற நினைத்துக் கொண்டிருந்தோம். கடந்த சில மணி நேரங்களில் நமது விஞ்ஞானிகள் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தினார்கள்! நாம் நிலவுக்கு மிக நெருக்கமாக வந்தோம். இருப்பினும்… தொட்டுப் பிடிக்க இன்னும் மெனக்கெட வேண்டியிருக்கிறது.

chandrayaan2 isro1 - 2026

நம் நாட்டு மக்களுக்காக மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மனிதர்களுக்காகவும் இந்தியா சிந்திக்கிறது. நம் விண்வெளித் திட்டங்களில் மிகச் சிறப்பானவை இனி வரும் காலங்களில் நிகழும். நாம் புதியன கண்டுபிடிப்போம். புதிய இலக்குகளுக்கு முன்னேறிச் செல்வோம்!

இதுவரை எவரும் மேற்கொள்ளாத புதிய பயணத்தை நீங்கள் மேற்கொண்டீர்கள். விஞ்ஞானிகளுக்கு நான் கூற விரும்புவது ஒன்றுதான்… இந்தியா எப்போதும் உங்களுக்குத் துணை நிற்கும்! இந்தியாவின் வளர்ச்சிக்காக ஈடு இணையற்ற உழைப்பை நீங்கள் தந்து கொண்டிருக்கிறீர்கள்.

ALSO READ:  யுபிஐ கட்டணத்துக்கு வரியா? பரவும் வதந்தியும் அரசின் விளக்கமும்!

நீங்கள் வெண்ணையின் மீது எளிதாக நடப்பவர்கள் இல்லை, பாறைகள் மீது கடின பயணம் மேற்கொள்பவர்கள்! உங்களால் இயன்ற அளவுக்கு நிலவை நெருங்கினீர்கள்! விஞ்ஞானிகளுக்கு மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தினருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்.

chandrayaan2 isro - 2026

நம் வரலாறு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்டது. அதில் நம்மை சோர்வடையச் செய்யும் தருணங்களும் உண்டு. ஆனால் நாம் மீண்டும் எழுச்சி பெற்றிருக்கிறோம். இதுதான் நமது நாகரீக உலகை வளர்த்து வந்துள்ளது!

நான் பெருமையுடன் கூறுகிறேன். உங்கள் முயற்சிகள் மிகச்சிறப்பானவை. தேசத்தின் மாபெரும் வளர்ச்சிக்காக நீங்கள் கடுமையாக உழைத்துள்ளீர்கள்! நீங்கள் புன்முறுவல் பூப்பதற்கான தருணங்களை நாங்கள் பலமுறை வழங்கியிருக்கிறோம்.

இன்று நாம் கற்றுக் கொண்ட பாடம் நமது எதிர்கால பயணங்களை உறுதி செய்யும்! எப்போதும் தோல்வியை ஒப்புக் கொள்ளாத வெற்றிப் பயணம் இது. உங்களை எண்ணி நாடே பெருமைப்படுகிறது. நான் உங்களுடன் இருப்பேன். நாடும் உங்களுக்குத் துணையாக இருக்கும்.

இடையூறும் சங்கடமும் நமக்கு புதிதாக ஒன்றைக் கற்றுக் கொடுக்கிறது. சந்திரயான் 2 பயணத்தின் இறுதிக் கட்டம் நமக்கு வேதனையைத் தந்திருக்கலாம்! ஆனாலும் அதன் பயணம் நமக்கு பெருமிதத்தைக் கொடுத்துள்ளது. இப்போதும் கூட நமது ஆர்பிட்டர் சந்திரனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இந்தியா உலக நாடுகளில் விண்வெளி திட்டங்களில் முன்னணியில் உள்ள நாடு!

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

உங்கள் உழைப்பால்தான் செவ்வாய் கிரகத்தை நாம் எட்ட முடிந்தது. சந்திரயான்தான் முதன் முதலில் நிலவில் நீர் இருப்பதை உலகிற்குச் சொன்னது! ஒரே நேரத்தில் 100 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியும் சாதித்துள்ளோம். எந்த வித தடையும் நிராசையும் நமக்குத் தேவையில்லை. முன்னேற வழி காண்போம். விஞ்ஞானத்தின் அடிப்படையே முயற்சி, முயற்சி மேலும் முயற்சிதான்.

உங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. உங்கள் எண்ணங்களை நான் அறிவேன். உங்களிடமிருந்து உறுதியைப் பெற்றுக் கொள்வதற்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். உங்களிடம் ஒரு போர் அடிக்கும் உரையை நிகழ்த்தி உங்களை மேலும் நிலைகுலைய வைக்க நான் இங்கே வரவில்லை. உங்களை உற்சாகமூட்டவே மீண்டும் பேச வந்தேன்.

இத்தனை திறன் வாய்ந்த விஞ்ஞானிகளுக்கு நல்வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். இனிமேல் தான் நல்ல திட்டங்கள் நம்முன் உள்ளன. இனி வரும் திட்டங்களுக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img