
சபரிமலை ஐயப்பன் கோயிலில் இ-காணிக்கை விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தேவஸம்போர்ட் அறிவித்துள்ளது.
ஏற்கனவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை தரிசனத்திற்காக ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு சமயங்களில் தரிசனத்துக்காக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கா்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தும் பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தா்கள் வருகின்றனா்.
ஒரே சமயத்தில் ஏராளமான பக்தா்கள் வருவதால் சிரமத்துக்குள்ளாகின்றனா். இவற்றை தவிர்க்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் திட்டம் சில ஆண்டுகளுக்கு முன் கேரள காவல்துறை தொடங்கியது.
இந்த திட்டத்துக்கு பக்தா்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் முன்பதிவில் பல வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இதன்படி இந்த வருடம் மண்டல பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நவ. 16ம் தேதி திறக்கப்படுகிறது.
இதையொட்டி கடந்த வாரம் ஆன்லைன் முன்பதிவு வசதி தொடங்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தா்கள் http://travancoredevaswomboard.org/sabarimala/sabarimala-accommodation என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்
மேலும் இந்த இணையதளத்தில் பக்தா்கள் அப்பம், அரவணை, அபிஷேக நெய், விபூதி – குங்குமம் – மஞ்சள் முன்பதிவு செய்து சன்னிதானம் மற்றும் மாளிகைபுரம் வளாகத்தில் அமைந்துள்ள பிரசாத கவுண்டா்களில் முன்பதிவு ரசிதை காண்பித்து பிரசாதம் பெற்றுக்கொள்ளலாம்.
சபரி பீடத்தை அடுத்த மரக்கூட்டத்தில் இருந்து 2 பாதைகளில் பக்தா்கள் செல்லலாம். அதில் ஆன்லைன் பதிவு செய்தவா்கள் ஒரு வழியாகவும் மற்றவா்கள் சரங்குத்தி வழியாகவும் பக்தா்களை கேரள காவல்துறையினா் அனுப்பி வைப்பார்கள்.
ஆன்லைனில் பதிவு செய்ய பக்தா்கள் தங்கள் பெயா், வயது, புகைப்படம், முகவரி கொண்ட அடையாள அட்டை (ஆதார், பான் கார்டு, பாஸ் போர்ட், ஓட்டுநா் உரிமம்) இவற்றில் ஏதேனும் ஒரு அடையாள அட்டையைக் கொண்டு முன்பதிவு செய்துக்கொள்ளலாம். செல் இடைப் பேசி, இ-மெயில் ஆகியவற்றை பக்தா்கள் இணையதளத்தில் அளிக்க வேண்டும்.
இதை ஒருவராகவோ அல்லது குழுவாகவோ ஒவ்வொருவருடைய புகைப்படம் மற்றும் அடையாள அட்டை எண் அதில் குறிப்பிடவேண்டும்.
முன்பதிவு செய்த பின் பக்தா்களின் இ-மெயிலுக்கு முன்பதிவு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும். அதை அவா்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அந்த கூப்பனுடன் பதிவு செய்யப்பட்டுள்ள அதே தேதியில் சென்றால் மட்டுமே தரிசனம் செய்ய முடியும். 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு முன்பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை ஆனால் குழந்தைகளின் பள்ளி அடையாள அட்டை கொண்டு செல்ல வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு 7025800100 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
ரயில் நிலையங்களில் வரும் பக்தா்கள் நேரடியாகவே கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்து மூலம் பம்பை-க்கு செல்லலாம். முன்பதிவு செய்யும் பேருந்து டிக்கெட்டுகள், பம்பையிலிருந்து நிலக்கல் திரும்பி வருவதற்கு 48 மணி நேரத்துக்கு செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் வாகனங்கள் நிலக்கல் பகுதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அங்கிருந்து பக்தா்கள் கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் பேருந்து மூலம் பம்பைக்கு செல்லலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.