
கல்வி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி தில்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ) மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்ற ஜே.என்.யூ. பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் அண்மையில் மாணவர்களின் விடுதி கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது; அதேபோல் விடுதி நிர்வாக அமைப்பில் சில பிரிவுகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன.
மேலும் போராடும் மாணவர்களை ஒடுக்கும் வகையில் அபராதத் தொகையும் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றிருந்தார். இப்பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்குள் செல்லாத வகையில் காவலர்கள் தடுப்புகளை அமைத்திருந்தனர். இத்தடுப்புகளை மீறி மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்துக்குள் குதிக்க முயன்றனர்.
அவர்களை காவலர் தடுத்து நிறுத்தி குண்டு கட்டாகவும் தரதரவெனவும் இழுத்து சென்று கைது செய்தனர். இதனால் தெற்கு தில்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.