
ஹைதராபாத் பெண் டாக்டர் பலாத்கார படுகொலை தொடர்பில் கைது செய்யப் பட்ட நான்கு பேரையும் என்கவுன்டர் செய்யப்பட்ட விவகாரம் குறித்து, அப்போது என்ன நடந்தது என்று செய்தியாளர்களிடம் விளக்கிக் கூறினார் சைபராபாத் காவல் துறை ஆணையர் விஸ்வநாத் சி சஜ்ஜனார்.
ஹைதராபாத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவ.27 மற்றும் 28 அன்று கால்நடை மருத்துவரான இளம் பெண்ணை திட்டமிட்டு கடத்தி, அலையவைத்து, உதவு போல் நடித்து வஞ்சகமாக பின்னிரவு வரை அவரை இருக்க வைத்து, அருகில் இருந்த புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, பின்னர் அவரை எரித்துக் கொன்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றோம். இந்தச் சம்பவம் தொடர்பாக அறிவியல் ரீதியான அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து வந்தோம்.
இன்று காலை, அவர்களை வைத்து இந்த நிகழ்வு எப்படி நடந்தது என்பதை அவர்கள் மூலம் தெரிந்து கொள்ள சம்பவ இடத்துக்கு அவர்களை அழைத்து வந்தோம்.
இந்த நான்கு பேரில் சென்னகேசவலுவுக்கு 26 வயது. மற்றவர்களுக்கு 20 வயது. இவர்கள் 4 பேரையும் கடந்த ஒரு வாரமாக சிறையில் அடைத்திருந்தோம். குற்றவாளிகள் எங்களிடம் பல உண்மைகளைத் தெரிவித்தனர். அவர்களிடம் பல கட்டங்களாக விசாரணை நடத்தப் பட்டது. அந்தப் பெண்ணுக்கு மது ஊற்றி வாயைப் பொத்தி சித்ரவதை செய்ததைச் சொன்னார்கள். இந்த நிகழ்வின் போது, என்ன நடந்தது என்பதை நடித்துக் காட்டவே அவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்துச் சென்றோம்.

அப்போது அந்தப் பெண்ணின் மொபைல் போன் எங்கே என விசாரித்தோம். அப்போது, இங்கே உள்ளது அங்கே உள்ளது என அவர்கள் நால்வரும் போக்குக் காட்டினர். பின்னர் 4 பேரும் போலீசாரை நோக்கி கற்களை வீசி தாக்கத் தொடங்கினர். இதில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீஸாருக்கு காயம் ஏற்பட்டது. தொடர்ந்து எங்களிடம் இருந்து துப்பாக்கியைப் பறித்து சுட முயன்று, அப்படியே தப்பி ஓட முயற்சி செய்தனர்.
இதனால் நாங்கள் அவர்களை சரண் அடையும் படி எச்சரிக்கை செய்தோம். அதை மீறி அவர்கள் தொடர்ந்து போலீசாரை நோக்கி சுட்டனர். அதனாலேயே அவர்களை நோக்கி பதிலுக்கு சுட்டோம். இது சரியாக அதிகாலை 4.45 மணி முதல் 6.15 மணிக்குள் நடந்தது. அவர்கள் 4 பேரையும் சம்பவ இடத்துக்கு அழைத்துச் செல்லும் போது 10க்கும் மேற்பட்ட போலீசார் காவலுக்கு சென்றனர்.

அரசு மருத்துவனையில் குற்றவாளிகள் 4 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்குப் பின்னர் மற்ற விவரங்கள் தெரிய வரும்.
இந்த என்கவுன்டர் குறித்த விவரங்களை மாநில அரசுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் தெரிவித்து விளக்கம் அளிப்போம் என்றார் சஜ்ஜனார்.
[poll id = “28”]

