தில்லி: நாட்டில் மக்கள் தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை என்றும், மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் பாரத குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 71வது குடியரசு தினம் ஜன.26ஆம் தேதி நாளை கொண்டாடப்படுகிறது. இந்த குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோ பங்கேற்கிறார். நாட்டின் 71வது குடியரசு தின விழாவையொட்டி நாட்டு மக்களிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.
அப்போது அவர்…, 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை வாழ்த்த விரும்புகிறேன். நமக்கு பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. விவசாயிகளுக்கு நிரந்தர வருமானம் கிடைப்பதை வேளாண் திட்டங்கள் உறுதிப் படுத்துகின்றன. மத்திய அரசின் ஜல் ஆந்தோலன் திட்டம் பெரும் வெற்றி அடைந்துள்ளது. ஒரே நாடு, ஒரே சந்தை என்ற இலக்கை ஜிஎஸ்டி பூர்த்தி செய்துள்ளது.
கல்வி வளர்ச்சி அபாரமாக வளர்ந்துள்ளது. ஒவ்வொரு குழந்தையும் கல்வி கற்கும் உரிமையைப் பெற்றுள்ளது. தூய்மை இந்தியா பொதுமக்களின் பங்களிப்பால் மிகக் குறுகிய காலத்தில் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. பிரதமரின் உஜ்வலா யோஜனா பெருமைப்பட வேண்டிய திட்டம். இது ஏழைகளின் வாழ்க்கையில் ஒளியை ஏற்றியுள்ளது. 8 கோடி பயனாளிகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர், லடாக்கில் இந்த அரசு நிரந்தர தீர்வை கொண்டு வந்துள்ளது. சமூக நலம் சார்ந்த திட்டங்களை மத்திய அரசு தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தூய்மை இந்தியா திட்டம் அதிக மாற்றங்களைக் கொண்டு வந்த திட்டமாக உள்ளது. மகாத்மா காந்தியின் அகிம்சை வழியை இளைஞர்கள் கட்டாயம் நினைவில் கொள்ள வேண்டும்.
மக்கள்தொகைப் பெருக்கத்தை எதிர்கொள்ள புதிய திட்டம் தேவை. கடந்த ஆண்டு இஸ்ரோ நிகழ்த்திய சாதனைகள் பெருமை அளிக்கக்கூடியதாக உள்ளன. இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள் என்றார்.