விஸ்வ ஹிந்து சபா அமைப்பின் தலைவரான ரஞ்சீத் பச்சன், அவரது பிறந்தநாள் நேற்று கழிந்த நிலையில், ஞாயிற்றுக் கிழமை இன்று காலை உத்தரபிரதேசத்தின் லக்னோ நகரின் மையப் பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கோரக்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த ரஞ்சீத் பச்சன், தனது உறவினர் ஆதித்யாவுடன் காலை நடைப்பயணம் சென்றிருந்தார். ஹஸ்ரத்கஞ்சில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் (சி.டி.ஆர்.ஐ) கட்டடத்திற்கு அருகிலுள்ள குளோப் பூங்காவின் நடைபாதையில் அவர் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுத் தப்பியுள்ளார்.
காலை 6.30 மணி அளவில் ரஞ்சீத் பச்சன் முகத்தில் துப்பாக்கியால் சுட்டதில், ரஞ்சீத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது உறவினர் படுகாயமடைந்தார். அவர், கிங் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் (கேஜிஎம்யூ) மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டது என்றும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
“துப்பாக்கியால் சுட்டவர், காலை நேரத்தில் நடந்து செல்வதுபோல் சென்று, ரஞ்சீத் பச்சனை அணுகி தனது செல்போன் பிரச்னையாக இருப்பதால், அதில் அழைப்பு விடுக்குமாறு செல்போனைக் காட்டி கேட்டுள்ளார். பின் உடனே துப்பாக்கியால் ரஞ்சீத்தின் முகத்தில் சுட்டுள்ளார். இதில் அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டார்”என்று காவல் உதவி ஆணையர் (ஹஸ்ரத்கஞ்ச் வட்டம்) அபய் மிஸ்ரா கூறினார்.
இந்தப் படுகொலை நிகழ்வினை அடுத்து, கே.டி.சிங் பாபு ஸ்டேடியம் போலீஸ் புறக்காவல் நிலையத்தில் இருந்த சந்தீப் திவாரி உட்பட நான்கு போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் சுஜீத் பாண்டே தெரிவித்துள்ளார்.
“தடயவியல் நிபுணர்கள் அந்த இடத்தை ஆய்வு செய்கிறார்கள். நாங்கள் சி.சி.டி.வி.களை ஆய்வு செய்து அனைத்து கோணங்களிலிருந்தும் வழக்கை விசாரித்து வருகிறோம். குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்” என்று காவல் துணை ஆணையர் (மத்திய லக்னோ) தினேஷ் சிங் கூறினார்.
ரஞ்சீத் பச்சனின் படுகொலைச் செய்தி கேட்டு பச்சனின் குடும்பத்தினர் லக்னோவுக்கு விரைந்துள்ளனர். அவர் தனது மனைவியுடன் மாநில தலைநகரான ஹுசைங்கஞ்ச் பகுதியில் வசித்து வந்தார். ரஞ்சீத் பச்சன் தனது 40 வது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடினார். அவர் தொடர்ந்து, CAA மற்றும் NRC க்கு ஆதரவாக ஒரு நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவரது மைத்துனர் மனோஜ் குமார் சர்மா தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஆதரவாளர்கள் அவரது வீட்டிற்கு வெளியே காவல்துறையினருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
கடந்த ஆண்டு மாநில தலைநகரில் ஒரு வலதுசாரி இந்து தலைவரின் படுகொலையை அடுத்து, இது இரண்டாவது கொலை என்பது அதிர்ச்சி அளிக்கக் கூடியது. கடந்த வருடம் அக்.18ம் தேதி இந்து சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் கமலேஷ் திவாரி அவரது குர்ஷெட் பாக் இல்லத்தில் படுகொலை செய்யப் பட்டார்! அந்தச் சுவடு மறைவதற்குள், சிஏஏ, என்.ஆர்.சி.,க்கு ஆதரவாக கூட்டங்களை ஏற்பாடு செய்த ஒருவர் படுகொலை செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.