ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தேசிய குடிமக்கள் பதிவேடு: மத்திய அரசு திட்டவட்டம்
தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.
அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு அண்மையில் வெளியிடப்பட்டது. இதில் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. அவர்கள் வெளிநாட்டினராக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்திய குடியுரிமையை நிரூபிக்க அவர்களுக்கு காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குடியுரிமை நிரூபிக்க தவறினால் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக தடுப்புமையங்களில் அடைக்கப்படுவார்கள்.
இதேபோல சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரைக் கண்டுபிடிக்க நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே அறிவித்துள்ளார். இந்தநிலையில் இதுபற்றி மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது:
தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பை ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த சமயத்தில் வீடு வீடாக சென்று மக்களிடம் தகவல் சேகரிக்கப்படும். ஆதார் உட்பட மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அத்தனை தகவல்களும் சேகரிக்கப்படும்.அசாம் தவிர நாட்டின் மற்ற மாநிலங்களில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயல்படுத்தப்படும்.
இவ்வாறு நித்யானந்த் ராய் கூறினார்.