கொரோனா வைரஸ் ஜாதி, மதம், நிறம், மொழி வேறுபாடு பார்க்காது, 2020ம் வருடம் மேடு பள்ளமாக தொடங்கி உள்ளது, கொரோனா மூலம் நிறைய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சென்னை: 2020ம் வருடம் மேடு பள்ளமாக தொடங்கி உள்ளது, கொரோனா மூலம் நிறைய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுக்க மத்திய அரசு மூலம் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் கொரோனா பரவல் குறைவாக உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். இன்று இரவு இந்த தளர்வு அமலுக்கு வர உள்ளது.
இந்த நிலையில் பிரதமர் மோடி கொரோனா குறித்தும் அதற்கு எதிரான நடவடிக்கை குறித்தும் தனது ”லிங்கடின்” பக்கத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சிறு குறிப்பை வெளியிட்டுள்ளார். பணியாளர்கள், பிசினஸ்மேன்கள் இருக்கும் தளத்தில் அவர் முக்கியமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
பிரதமர் மோடி தனது போஸ்டில், கொரோனாவிற்கு எதிராக உலகமே போராடிக்கொண்டு இருக்கிறது. இந்தியாவின் துடிப்பான மற்றும் அறிவார்ந்த இளைஞர்கள் நம் நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த நூற்றாண்டில் 2020ம் வருடம் மேடு பள்ளமாக தொடங்கி உள்ளது. கொரோனா மூலம் நிறைய இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக பணியாளர்களின் வாழ்க்கையை கொரோனா பெரிய அளவில் மாற்றியுள்ளது. இந்த நாட்களில் வீடுதான் புதிய அலுவலகம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இணையம்தான் புதிய மீட்டிங் அறை என்ற நிலை உருவாகி உள்ளது. அலுவலக இடைவேளை அரட்டை என்பது இப்போது வரலாறு போல ஆகிவிட்டது. நானும் இந்த சூழ்நிலைக்கு தகுந்தபடி என்னை மாற்றிக்கொண்டு இருக்கிறேன்.
நான் தற்போது நடத்தும் பெரும்பாலான மீட்டிங்குகள் அது அமைச்சர்களுடனான மீட்டிங்காக இருந்தாலும் சரி, உலக தலைவர்கள், அலுவலக அதிகாரிகள் என்று யாருடன் நடக்கும் மீட்டிங்காக இருந்தாலும் சரி. எல்லாமே வீடியோ கான்பிரன்ஸ் மூலம்தான் செய்யப்படுகிறது. வீட்டில் இருந்து பணிகளை செய்ய மக்கள் வழிகளை தேடி வருகிறார்கள். வீட்டிலேயே இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக நம்முடைய நடிகர்கள் சிறப்பான வீடியோக்கள் வெளியிட்டுள்ளனர்.
சில பாடகர்கள் இணையத்திலேயே இசை கச்சேரி நடத்துகிறார்கள். சிலர் இணையத்திலேயே செஸ் விளையாட்டு போட்டிகளை விளையாடுகிறார்கள். இதுபோல பலர் வித்தியாசமாக செயல்படுகிறார்கள். வேலை பார்க்கும் இடங்கள் டிஜிட்டல் மையமாக மாறி வருகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் அதிகாரத்துவம், இடைத்தரகர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் வேகமாக முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் ஜாதி, மதம், நிறம், மொழி வேறுபாடு பார்க்காது. நாம் கொரோனாவிற்கு எதிராக ஒன்றாக போராட வேண்டும். நாம் இதில் ஒன்றாக இருக்க வேண்டும். சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமை மட்டுமே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். வரலாற்றில் இதற்கு முன் பல நாடுகள் சண்டை போட்டு இருக்கிறது . ஆனால் இந்த நேரம் சண்டைக்கானது அல்ல. நாம் எல்லோரும் ஒன்றாக இதில் செயல்பட வேண்டும்.
இந்தியா வரும் நாட்களில் உலக வளர்ச்சிக்கான திட்டங்களை கொண்டு வர வேண்டும். இந்தியாவிற்கு மட்டுமின்றி மொத்த மனித குலத்திற்கும் முன்னேற்றம் ஏற்படும் வகையில் நாம் செயல்பட வேண்டும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கொண்டு நாம் முன்னேற வேண்டும். இதன் மூலம் நாம் புதிய வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.