
விசாகப்பட்டினத்தில் கொரோனா தொற்று பாதித்த 4 மாத கைக்குழந்தை குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது.
இதுவரை 3.08 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 8,854 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பொதுவாக குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்தவர்களை எளிதில் தாக்குவதாக மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதற்கு அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி போதிய அளவு இல்லாததே காரணமாக கூறப்படுகிறது.
அப்படி இருக்கையில், விசாகப்பட்டினத்தில் 4 மாத கைக்குழந்தை கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விசாகப்பட்டினத்தில் 252 பேர் பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விசாகப்பட்டினம் மாவட்டம் கிழக்கு கோதாவரியின் பழங்குடிப் பெண்ணுக்கு கடந்த மே மாதத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர் மூலமாக அவரது நான்கு மாத கைக்குழந்தைக்கும் பாதிப்பு ஏற்பட்டது.
வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த குழந்தைக்கு நேற்று நடத்தப்பட்ட சோதனையில் எதிர்மறை வந்ததை அடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வினய் சந்த் கூறியதாவது: குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மே 25 அன்று விசாகப்பட்டினம் விம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.
அவருக்கு வென்டிலேட்டரில் 18 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் குழந்தைக்கு மீண்டும் பரிசோதனை நடத்தியதில் எதிர்மறையாக வந்தன. இதனையடுத்து நேற்று மாலை குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.


