மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய 45 வயது மிக்க நபரின் உடல் ரயில் தண்டவாளத்தின் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதுபற்றி யெவாத் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
“இந்த நபர் மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகத் தெரிவித்ததையடுத்து, பிம்ப்ரி சின்ச்வாட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜூன் 24-ஆம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அடுத்த தினமே, அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர் குணமடைந்ததையடுத்து, மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
இதன்பிறகு, போரிபார்தி கிராமத்திலுள்ள அவரது மூத்த சகோதரர் வீட்டுக்குச் சென்றார். புதன்கிழமை இரவு குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் படுக்கச் சென்றுவிட்டனர்.
வியாழக்கிழமை காலை அவர் வீட்டில் இல்லையென்றதும், அவரது சகோதரர் அவரைத் தேடத் தொடங்கியுள்ளார். அதன்பிறகு, ரயில் தண்டவாளத்தில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
அவர் உடல்நலக் குறைவு குறித்தும், தாயின் மறைவு குறித்தும் மிகவும் கவலையில் இருந்ததால், இந்த முடிவை எடுத்திருக்கலாம் என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தற்கொலை கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.”
கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.