பாம்பை மேலே ஏவி கொன்றபோது, வாய் பேச முடியாமல் உத்ரா துடித்ததையும், வாயில் நுரை தள்ளி இறந்ததையும் பார்த்து கொண்டே நின்றாராம் கணவர் சூரஜ். உத்ரா இறந்த பிறகு, விடிய விடிய சடலம் பக்கத்திலேயே கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார். புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் விடிகாலைதான் அங்கிருந்து கிளம்பி சென்றராம். எல்லாத்துக்கும் காரணம், இன்சூரன்ஸ் பணம்தான் என்று வாக்குமூலம் தந்துள்ளார் கொடூர சூரஜ்!
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்த உத்ரா. வாய் பேச முடியாதவர். 25 வயதாகிறது. சமீபத்தில் இவர் இறந்துவிட்டார். கல்யாணம் ஆகி ஒரு வயதில் மகன் உள்ள நிலையில், நகைக்காகவும், 2வது கல்யாணம் செய்து கொள்வதற்காகவும் மனைவியை பாம்புகளை ஏவி கொன்றவர் கணவர் சூரஜ்.
மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது. போராடி அவர் உயிரை பெற்றோர் மீட்டு கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து சென்றனர். அந்த வீட்டுக்குதான் மே 7 ந்தேதி சூரஜ் சென்றிருக்கிறார்.
திரும்பவும் பாம்பை ஏவிவிட்டு மனைவியை கொன்றிருக்கிறார் சூரஜ். முதல்முறை பெட்ரூமில் பாம்பு கடித்து உத்ரா அலறியபோது, சூரஜ்தான் அந்த பாம்பை பைக்குள் போட்டு வெளியே கொண்டு போயுள்ளார். இப்போது விசாரணையில், சூரஜ் வனவிலங்கு ஆர்வலர்கள் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்து வருகிறார் என தெரியவந்தது.
உத்ராவை கொலை செய்வதற்காக கூகுளில் பாம்புகளை தேடி உள்ளார். பிறகு பாம்பு பிடிப்பவர்கள் யார், யார் என்று யூடியூப் வீடியோக்களில் தேடி, இறுதியில் பாம்புகளை லாவகமாக கையாளும் சுரேஷ் 10 ஆயிரம் கொடுத்து விஷ பாம்பை வாங்கி கொண்டு உத்ரா வீட்டுக்கு சென்றார். உத்ரா தூங்கும்போது, அந்த பாம்பை அவர் மீது தூக்கி வீசியுள்ளார். 2 முறை அந்த பாம்பு உத்ராவை கொத்தி உள்ளது. படுக்கையிலேயே உயிர் பிரிந்துவிட்டது.
முதல்முறை உத்ரா பிழைத்து வந்ததுமே 2-வது முறை அவர் பிழைத்து விடக்கூடாது என்பதில் சூரஜ் உறுதியாக இருந்திருக்கிறார். அதனால் அன்றைய இரவு பாயாசம் தந்திருக்கிறார். ஆப்பிள் ஜூஸும் தந்திருக்கிறார். இவைகள் இரண்டிலுமே தூக்கமாத்திரையை கலந்து தந்திருக்கிறார் சூரஜ்.
இதை குடித்ததுமே உத்ரா தூங்கிவிட்டார். அதன்பிறகுதான் பாம்பை கடிக்க வைத்தாராம் சூரஜ். இந்த தகவல்களை எல்லாம் சூரஜ்தான் போலீசில் சொல்லி இருந்தார். அதனால், உத்ரா மீது ஏவப்பட்ட பாம்பை தோண்டி எடுத்து போஸ்ட் மார்ட்டமும் நடத்தப்பட்டது.
போலீசாரின் விசாரணை பிடியில் சூரஜ் உள்ளதால், இதை பற்றின மேலும் பல தகவல்களை போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கல்யாணத்துக்கு 100 சவரன் நகைகள், ரூ.5 லட்சம் என வரதட்சணை தந்தபோதும், இன்னும் வரதட்சணை கேட்டு உத்ராவை சூரஜ் கொடுமைப்படுத்தினாராம். அதுமட்டுமில்லை. உத்ராவை கொன்றதே தான் தான் என ஊடகங்கள் முன்பேயே தெரிவித்து விட்டார்.
கொலை செய்வதற்கு கொஞ்ச நாள் முன்புதான், உத்ரா பெயரில் சூரஜ் இன்சூரன்ஸ் செய்துள்ளார். இந்த இன்சூரன்ஸ் பணத்தை பெறுவதற்காகவே உத்ராவை கொன்றுள்ளதாக இப்போது தெரிவித்துள்ளார். போலீசாரின் தீவிர விசாரணையில் குற்றத்தையும் பகிரங்கமாகவே அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
பாம்பு ஏவி கொன்றபோது உத்ரா துடிப்பதையும், உயிர் போவதையும் பார்த்து கொண்டே நின்றாராம்.. உத்ரா இறந்த பிறகு, விடிய விடிய சடலம் பக்கத்திலேயே கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார். புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம் வராமல் விடிகாலைதான் அங்கிருந்து கிளம்பி சென்றாராம்.. ஒரு வாய் பேச முடியாத பெண் மிக மோசமாக கொல்லப்பட்டுள்ளார்.. இந்த கொலையின் அதிர்ச்சி இன்னமும் விலகாத நிலையில், சூரஜ்ஜின் இந்த வாக்குமூலம் மேலும் பரபரப்பை தந்து வருகிறது.