
உழவனுக்கு உயர்வு
– பத்மன் –
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்றார் மகாகவி பாரதியார். அதனை மிகச் சரியாகப் புரிந்துகொண்டு தற்போது நிறைவேற்றியுள்ளார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி.
“காடு வெளைஞ்சு என்ன மச்சான் நமக்குக் காயும் காலும்தானே மிச்சம்” என்று விவசாயப் பெருமக்கள் சங்கடப்படக்கூடாது என்றால் அதற்கு உழவை ஒரு தொழிலாக உயர்த்துவதுதான் தீர்வு. அதைத்தான் பிரதமர் மோடி செய்துள்ளார்.
உழவர்களை உயர்த்தும் மூன்று வகையான மசோதாக்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றி, சட்டமாக்கியிருப்பதன் மூலம் இதனைச் சாதித்துள்ளார்.

அந்த 3 மசோதாக்கள் யாவை?
முதலாவது, விவசாயிகளின் விளைபொருள் வர்த்தகம் மற்றும் வியாபார ஊக்குவிப்பு, வசதியளிப்பு மசோதா. இது ‘ஏபிஎம்சி’ என்று சுருக்கமாக அழைக்கப்படும் அங்கீகரிக்கப்பட்ட வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் மண்டிகள் அல்லாத வெளிச் சந்தைகளில், தங்களது விளைபொருட்களை விவசாயிகள் தாராளமாக விற்பனை செய்வதற்கும், இதற்காக எவ்வித மாநில வரிகளோ அல்லது கட்டணங்களோ செலுத்தாமல் இந்த விற்பனையை மேற்கொள்வதற்கும் வழிவகுக்கிறது.
இரண்டாவது, விவசாயிகளுக்கு அதிகாரப் பகிர்வையும் பாதுகாப்பையும் உறுதிசெய்யும் வகையிலான, விலை உறுதிமொழி மற்றும் விவசாயச் சேவைகள் மீதான விவசாயிகள் ஒப்பந்த மசோதா. இது, எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட விலைக்கு தனது விளைபொருளை விற்பதற்காக, வேளாண் நிறுவனங்கள், மொத்த விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்கள் அல்லது பெரிய சில்லறை வியாபாரிகள் ஆகியோருடன் விவசாயிகளே ஒப்பந்தம் செய்துகொண்டு விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்கு வழிவகுக்கிறது.
மூன்றாவது, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்த மசோதா. இது, நெருக்கடியான ஒருசில சந்தர்ப்பங்களைத் தவிர பொதுவாக, அனைத்துவித உணவு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி தயாரித்தல், இருப்பு வைத்தல், ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குக் கொண்டு செல்லுதல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்குத் தாராளமாக அனுமதி அளிக்கிறது.

இந்த மூன்று மசோதாக்களும்தான் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அண்மையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு சட்டமாக்கப்பட்டுள்ளன.
இவற்றில் முதலாவது சட்டம், விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையிலும் அவர்களது வருமானத்தை அதிகரிக்கும் வகையிலும் பரவலான சந்தை வாய்ப்பைத் தருகிறது. இதன் மூலம் இந்தியாவின் எந்த மூலையிலும்கூட தனது விளைபொருளை விற்கின்ற வாய்ப்பையும் அதிகாரத்தையும் விவசாயி பெறுகிறார். இதனால், எங்கே தேவை மிகுதியாக இருந்து தனக்கு கூடுதல் விலை கிடைக்கிறதோ அங்கே தனது விளைபொருளை விவசாயிகள் விற்றுக்கொள்ள முடியும்.
இடைத்தரகர்களால் கழுத்தறுப்பு விலைக்கு தனது பொருட்களை விற்க வேண்டிய அவசியம் இனியில்லை. மேலும் அரசாங்க மண்டியில்லாத வெளிச் சந்தைகளில் விற்பதால் அதற்கான கட்டணங்களைச் செலுத்த வேண்டியதும் குறைகிறது. யார் வாங்குகிறார்களோ அவர்களே போக்குவரத்துக் கட்டணத்தையும் ஏற்றுக்கொள்வதால் அந்தச் சுமையும் நீங்குகிறது.
பொருட்களை உற்பத்தி செய்துவிட்டு யாரிடம் விற்பது என்று திண்டாடாமல், முன்கூட்டியே நியாயமாகவும் தனக்கு லாபம் தரும் வகையிலுமான விலைக்கு பொருட்களை விற்பதற்கான ஒப்பந்தத்தை வேளாண் நிறுவனங்கள், பெரிய வியாபாரிகள் போன்ற மாற்றுத் தரப்பினருடன் விவசாயி செய்துகொள்வதற்கு இரண்டாவது சட்டம் உதவுகிறது.
இதன் மூலம் விவசாயி வெறும் உழைப்பாளியாக மட்டுமே இருக்கும் நிலை மாறி, அவரும் ஒரு முதலாளி ஆகிறார். யார் கூடுதல் விலையும் வேளாண் பணிகளுக்கு நல்ல ஆதரவும் தருகிறார்களோ அவர்களுடன் விவசாயி கூட்டு வைத்துக் கொள்ளலாம்.

மூன்றாவது சட்டம், வேளாண் விளைபொருட்களை நாடு முழுவதும் தங்கு தடையின்றி, தேவையற்ற முட்டுக்கட்டைகள் இன்றி விற்பதற்கு உதவுகிறது. இதன்மூலம் ஓரிடத்தில் உணவு தானியங்கள் கிடைக்காமல் திண்டாடுவதும், மறுபுறத்தில் அபரிமிதமாக உற்பத்தி செய்துவிட்டு விற்கமுடியாமல் விவசாயி கையைப் பிசைந்து கொள்வதும் தவிர்க்கப்படுகிறது. பொருட்களின் தடையற்ற போக்குவரத்து, பரிமாற்றத்தால் ஒருசில அநியாய வியாபாரிகள் பதுக்கி வைத்து கொள்ளை லாபம் ஈட்டுவதும் தடுக்கப்படுகிறது.
அதுசரி, இவ்வளவு நன்மையுள்ள இந்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு எழுவானேன்? எதிர்ப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று அறியாமை, மற்றொன்று அரசியல். உண்மையான விவசாயிகளுக்கு உள்ள சந்தேகம் என்ற அறியாமை அகன்றுவிட்டாலே, அரசியல் எதிர்ப்புக் கூச்சல்கள் தன்னைப்போல் அடங்கிவிடும்.
முதலாவது சட்டத்துக்கான எதிர்ப்பு, எம்எஸ்பி எனப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்படவில்லையே என்ற சந்தேகம். எம்எஸ்பி-யை இந்தச் சட்டம் எடுத்துவிடவில்லை. மாறாக, விவசாயிகளுக்கு இரண்டுவித வாய்ப்பைத் தருகிறது.
முதலாவது, அரசு அறிவிக்கும் எம்எஸ்பி-யின் அடிப்படையில் ஏபிஎம்சி மண்டிகளில் தங்களது விளைபொருட்களை உத்தரவாதமான விலையில் விவசாயிகள் விற்கலாம். இல்லையேல், அதைவிடக் கூடுதல் விலை கொடுக்கும் வெளியாரிடமும் விற்றுக் கொள்ளலாம். அது சந்தையின் தேவை, விநியோக அளவைப் பொருத்து அமையக்கூடிய விலையாகும். அது எம்எஸ்பி-யை விடக் குறைவாக இருப்பதற்கு வாய்ப்பில்லை.
ஒருவேளை ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவ்விதம் நிகழ்ந்தால், எம்எஸ்பி விலைக்கு விற்று குறைந்த லாபத்துடன் விவசாயி திருப்திப்பட்டுக் கொள்ளலாம். மேலும், வாங்குவோருடன் முன்கூட்டியே உரிய விலையை ஒப்பந்தம் செய்துகொள்ளும் வாய்ப்பு இருப்பதால் விவசாயி அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.
இரண்டாவது சட்டத்துக்கான எதிர்ப்பு, ஒருசில பெரிய நிறுவனங்கள் ஏகபோகம் பெற்று விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் செய்து விடுவார்களே என்ற சந்தேகம். இது விபரீதக் கற்பனை. சில பெரிய நிறுவனங்களின் போட்டி ஏற்பட வாய்ப்பிருக்கிறதே தவிர, ஒரே நிறுவனம் இத்தனைப் பெரிய இந்திய வேளாண் சந்தையில் முற்றுரிமை பெற வாய்ப்பில்லை.
ஆக, சில நிறுவனங்களின் போட்டியால் நன்மைதான் ஏற்படும். இதன் மூலம் விவசாயிக்கு உரிய வருமானம் கிடைப்பதோடு, நுகர்வோர் சுரண்டப்படுவதும் தடுக்கப்படும். அத்துடன் விவசாயத்தை நேசிக்கும் படித்தவர்கள், விற்பனை உத்தி- நிர்வாகம் தெரிந்தவர்கள் புதிய நிறுவனங்களைத் தொடங்கி விவசாயிகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, வேளாண் தொழிலில் இறங்க இந்தச் சட்டம் வழிவகுக்கிறது.
இந்த வகையில் சில ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல தொடங்கக் காத்திருக்கின்றன. பல சிறு, குறு விவசாயிகள் ஒன்றிணைந்து தாங்களே ஒரு நிறுவனமாக விவசாயத்தில் ஈடுபடவும் இது வழிவகுக்கிறது. பல்வேறு வகைகளிலும், விவசாயம் ஒரு தொழிலாக வளர்ச்சியடைய இந்தச் சட்டம் தூண்டுதலாக அமைந்துள்ளது.
மூன்றாவது சட்டத்துக்கான எதிர்ப்பு, தடையற்ற தாராள அனுமதியால் விலை வீழ்ச்சியும், அதற்கு மாறான செயற்கைத் தட்டுப்பாடும் ஏற்பட்டுவிடுமோ என்ற சந்தேகம். தேவை அதிகம் இருக்கும் இடங்களில் வரத்துக் குறைவாகவும், உற்பத்தி அதிகம் உள்ள இடங்களில் தேவை குறைவாகவும் இருப்பதால் ஏற்படும் பாதிப்புகளை இந்தச் சட்டம் அகற்றும் என்பதை முதலில் நினைவில் கொள்ள வேண்டும்.

இதனால் தேவைகளை விரைந்து பூர்த்தி செய்வதன் மூலமும், உற்பத்திப் பொருட்களை தடங்கலின்றி விநியோகிப்பதன் மூலமும் விவசாயிகளுக்குப் பயன்களே கிடைக்கின்றன. மேலும், இந்தச் சட்டத்தின் மூலம் குளிர்பதனச் சேமிப்புக் கிடங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் பொருட்களைக் கூடுதல் காலத்துக்குச் சேமித்து வைத்து விலை வீழ்ச்சியைத் தடுக்க முடியும்.
அத்துடன், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அரசு தலையிடுவதற்கு வழியுள்ளதால் செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாடு தடுக்கப்படும். வேளாண் பொருட்களின் விற்பனையில் அரசின் அனாவசியத் தலையீடு இருக்காது என்றுதான் கூறப்பட்டுள்ளதே தவிர, கண்காணிப்பே இருக்காது என்று கூறப்படவில்லை.
இப்போது இரண்டாவது எதிர்ப்பு வகைக்கு வருவோம்.
அரசியல்வாதிகளும் அரசியல் போர்வைக்குள் பதுங்கியிருக்கும் பதுக்கல் பேர்வழிகளும், இடைத்தரகர்களும் எதிர்ப்புக்குரல் எழுப்புவதன் உள்நோக்கத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். வெங்காயத்தைப் பதுக்கிவைத்து ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவது, சுகர் லாபி, காட்டன் லாபி என்று பல லாபிகளை உருவாக்கி அரசியல், பொருளாதார புரோக்கர் வேலை செய்வது போன்ற மாயாஜாலங்களை இனி மேற்கொள்ள முடியாதே என்ற அவர்களது கவலைதான் எதிர்ப்புக் கூக்குரலாக எழுந்துள்ளது.
ஆகையால் அத்தகைய எதிர்ப்பை, விவசாயிகளும், பொதுமக்களும் புறந்தள்ளிவிடுவதே நல்லது.
அதுசரி, சிறப்பானவை என்று கூறப்படும் இந்தச் சட்டங்களைச் செயல்படுத்தும்போது குறைகளே ஏற்பட வாய்ப்பில்லையா என்று சிலர் கேட்கலாம்.
குறைகள் ஏற்படலாம், அது புரிந்துகொள்ளப்பட்டு சரிசெய்யப்படும். அதேநேரத்தில், வேலையற்றவனுக்கு விவசாயமே கதி, விவசாயியின் வாழ்க்கைக்கு விமோசனம் இல்லை போன்ற இழிசொற்களையும் இழிநிலையையும் மாற்றி, விவசாயிகளின் வருமானத்தோடு அவர்களது தன்மானத்தையும் உயர்த்துவதற்கு வந்திருக்கும் ‘வாராதுபோல் வந்த மாமணி’ இந்தச் சட்டங்கள் என்றால் அது மிகையல்ல!



