பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை கடந்த 17ம் தேதி நிறைவடைந்தது, இந்நிலையில் இந்த வழக்கின் மீதான தீர்ப்பு, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் மீதான தீர்ப்பு அனேகமாக மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எழுதி வரும் நீதிபதி குமாரசாமி, வழக்கு தொடர்புடைய ஆவணங்களை தணிக்கையாளர்கள் உதவியுடன் மதிப்பிட்டு வருகிறார். ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரின் சொத்துப் பட்டியலை தணிக்கையாளர்கள் குழு முழுதுமாக ஆய்வு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. தணிக்கையாளர் குழுவின் அறிக்கைக்காக நீதிபதி குமாரசாமி காத்திருப்பதாகவும், இதற்காக 5 பேர் கொண்ட குழு அவருக்கு உதவி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகள் மற்றும் அரசுத் தரப்பு வாதம் நடைபெற்ற போது, 125க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. ’ எனவே இந்தத் தீர்ப்பில் அந்தக் குழு மூலமாக தீர்ப்பு தயாராகி வருகிறதாம். இந்த வார இறுதியில் முதற்கட்ட தீர்ப்பு தயாரிப்பு நிறைவு பெற்று விடும் என்றும், தணிக்கையாளர்களின் அறிக்கை கிடைத்த பிறகு, ஏப்ரல் முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை நீக்கக்கோரி திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் தாக்கல் செய்த மனு செவ்வாய்க்கிழமை இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கு: தீர்ப்பு ஏப்ரல் முதல் வாரம் வெளியாக வாய்ப்பு!
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

