
காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள காஷ்மீரின் கதுவா மாவட்டத்திலிருந்து ரகசிய சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு ரகசியமாக வருவதற்கு ஏதுவாக இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது.
கடந்த ஆறு மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காவது சுரங்கப்பாதை இது என்றும் சர்வதேச எல்லையைத் தாண்டி வர இந்த சுரங்கப்பாதைகளைப் பயங்கரவாதிகள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
மேலும், சர்வதேச எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலம் உணவு மற்றும் ஆயுதங்களைப் பாகிஸ்தான் போட்டுச் செல்வது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
இது குறித்து எல்லைப் பாதுகாப்புப் படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் என்.எஸ் ஜாம்வால் கூறுகையில், “சுமார் 150 முதல் 175 மீட்டர் நீளமுள்ள சுரங்கப் பாதையைச் சர்வதேச எல்லையில் நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். சுமார் 30 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, 2 முதல் 3 மீட்டர் சுற்றளவு கொண்டது.
இந்த சுரங்கப்பாதை ஆறு முதல் எட்டு ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். இந்த சுரங்கப்பாதை மிகவும் நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ளது. சரியாக இதே இடத்தில்தான் கடந்தாண்டு ஜூன் 20ஆம் தேதி பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது” என்றார்.
முன்னதாக, கடந்த ஜனவரி 13ஆம் தேதி பாபியன் கிராமத்தில் 198 கிலோமீட்டர் நீளமுள்ள ரகசிய சுரங்கப்பாதையை எல்லைப்பாதுகாப்பு படை கண்டுபிடித்தது. அதேபோல, கடந்தாண்டு ஆகஸ்ட் 28, நவம்பர் 22 ஆகிய தேதிகளில் காஷ்மீரின் சம்பா மாவட்டத்திலும் இதேபோன்ற இரண்டு சுரங்கப் பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.