ஹரியானாவில் ஆண் குழந்தை பிறக்காத விரக்தியில் தன் நான்கு பெண் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானா மாநிலம் நுஹ் மாவட்டத்தில் வசித்து வருபவர் குர்ஷித். இவரது மனைவி ஃபர்மீனா. இவர்களுக்கு ஆறு, நான்கு, மூன்று மற்றும் ஒரு வயதில் நான்கு மகள்கள் உள்ளனர். இதனால் ஆண் குழந்தை இல்லாத விரக்தியில் இருந்துள்ளார் ஃபர்மீனா.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி புன்ஹானா பகுதியில் தனது உறவினரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள குர்ஷித் சென்ற நிலையில் தனது நான்கு குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார் ஃபர்மீனா. அப்போது தனது குழந்தைகளை கத்தியால் வெட்டிய ஃபர்மீனா தன்னுடைய கழுத்தையும் அறுத்து கொண்டுள்ளார்.
அன்று மாலை வீடு திரும்பிய குர்ஷித் வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது நான்கு மகள்களும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மனைவி ஃபர்மீனா உயிருக்கு போராடிய நிலையில் அவரை மருத்துவமனை கொண்டு சென்றுள்ளார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விசாரணை நடத்தியதில் ஆண் குழந்தை பிறக்காத விரக்தியில் பெண் குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக ஃபர்மீனா வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஃபர்மீனாவின் தொண்டை வெட்டப்பட்ட நிலையில் கடந்த நான்கு மாதமாக சிகிச்சை பெற்று வந்த அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.