பிரேசில் நாட்டின் அமேசானியா1 செயற்கைக்கோள் உள்ளிட்ட 19 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி-சி51 ராக்கெட் பிப்.28 ஞாயிறு இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி51 ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் செலுத்தப் பட்டது. 2021ஆம் ஆண்டில் இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பும் முதல் ராக்கெட் இது.
19 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் செலுத்தப் பட்ட பிஎஸ்.எல்.வி., சி51 ராக்கெட்டில் பிரேசில் நாட்டில் அமேசான் காடுகள் அழிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் அவற்றை கண்காணிக்கவும் விவசாயம் சார்ந்த புவிசார் ஆய்வுக்காகவும் அமைக்கப் பட்டுள்ள அமேசோனியா-1 என்ற செயற்கைக்கோள் முக்கியமானது.
இவற்றுடன், இஸ்ரோ தயாரித்துள்ள சிந்து நேத்ரா, ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா அமைப்பின் சதீஷ் சாட், சென்னை ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, நாக்பூர் ஜிஎச் ரைசோனி பொறியியல் கல்லூரி, கோவை சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி கூட்டமைப்பில் உருவான யுனிட்டிசாட் ஆகிய 5 செயற்கைக்கோள்களும், அமெரிக்காவுக்கு சொந்தமான 13 நானோ செயற்கைக்கோள்களும் அடங்கும்.
இன்று விண்ணில் செலுத்தப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட், இஸ்ரோ செலுத்தும் 59வது ராக்கெட் என்பது குறிப்பிடத் தக்கது. காலை 10:24க்கு விண்ணில் செலுத்தப்பட்ட இந்த ராக்கெட்க்கான ‘கவுன்ட் டவுன்’ நேற்று காலை 8:54க்கு தொடங்கியது.
இஸ்ரோ வணிக ரீதியிலான விண்வெளி நடவடிக்கைகளுக்கு ‘நியூ ஸ்பேஸ் இந்தியா’ என்ற நிறுவனத்தை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் மூலம் இஸ்ரோ முதன் முதலாக வணிக ரீதியில் பி.எஸ்.எல்.வி.- சி51 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.