புதுச்சேரி: புதுச்சேரியில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், பணி நீக்கம் செய்யப்பட்ட 6 போலீஸாரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை செவ்வாய்க்கிழமை நேற்று வெளியிட்ட சிபிசிஐடி எஸ்.பி. வெங்கடசாமி, 6 போலீஸாரின் புகைப்படங்களையும் வெளியிட்டார். கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரலில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த கும்பலிடம் இருந்து சிறுமிகள் மீட்கப்பட்டனர். அவர்களிடம் நடத்தப் பட்ட விசாரணையில், புதுச்சேரி போலீஸாரும் அவர்களை பலாத்காரம் செய்தது தெரியவந்தது. சிறுமிகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்ஷா, தலைமைக் காவலர்கள் குமரவேல், பண்டரிநாதன், காவலர்கள் சங்கர், செல்வகுமார், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் மீது புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். இந்நிலையில், ஐ.ஜி பிரவீர் ரஞ்சன் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமை தவிர்த்து இதர 8 போலீசாரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரை உடனடியாக கைது செய்யவும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் சிபிசிஐடி எஸ்பி வெங்கடசாமி தலைமையிலான தனிப்படையினர் பணி நீக்கம் செய்யப்பட்ட 9 போலீஸாரின் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள். இதில் தொடர்புடைய பணி நீக்கம் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகிய இருவரும் சிபிசிஐடி போலீஸாரிடம் கடந்த சனிக்கிழமை சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தேடப்பட்ட மற்ற 6 பேரையும் பிடிக்க சிபிசிஐடி போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அவர்களை சரணடையச் சொல்லியும் கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், நேற்று திடீரென அவர்களது புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பினை நேற்று எஸ்பி வெங்கடசாமி வெளியிட்டார். அப்போது, “தலைமறைவாகியுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட போலீஸார் சரணடையவில்லை. அவர்கள் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கிறோம். பொதுமக்கள் பார்த்து தகவல் தெரிவிப்பார்கள். விரைவில் அவர்களைக் கைது செய்ய எடுத்துள்ள நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று: என்று அவர் அப்போது குறிப்பிட்டார்.
புதுச்சேரி சிறுமிகள் பலாத்கார வழக்கில் 6 போலீஸார் தலைமறைவு குற்றவாளிகள்!
Published:

