பாலியல் இச்சைக்கு இணங்காத ஆத்திரத்தில் பெண் ஒருவரை 2 இளைஞர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் லலித்பூர் மாவட்டத்தில் தம்னா கிராமத்தில் பெண் ஒருவர் காய்கறி கடை நடத்தி வருகிறார். கடந்த 21-ம் தேதி அந்த பெண் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, பின் தொடர்ந்த 2 ஆண்கள் அவரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால் அந்த பெண் அவர்களை செருப்பால் அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அந்த பெண்ணின் வாயில் ஒரு துணியை வைத்து அடைத்தனர்.
மேலும் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கிய அவர்கள் ஒருக்கட்டத்தில் தங்களின் லைட்டரில் ஒரு கத்தியை சூடாக்கி அதை அப்பெண்ணின் கண்களில் சூடு வைத்து கொடுமைப்படுத்தினர்.
ஆனால் அப்போது போலீஸ் வாகனத்தில் சைரன் கேட்டதால் இருவரும் தப்பி ஓடிவிட்டார்கள். போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போதும், துரதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தெரியவில்லை.
அந்த பெண்ணை இரவு முழுவதும் தேடிய அவரது உறவினர்கள் காலையில் தான் காயமடைந்த நிலையில் இருந்த பெண்ணை பார்த்துள்ளனர். உடனடியாக அப்பெண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் சார்பில் புகாரளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்