போபால்: மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில், பெண்கள் பாதுகாப்புக்காக, ‘நிர்பயா ரோந்து படை’ என்ற தனிப்படை உள்ளது. அதன் தலைவராக இருப்பவர் பெண் சப்-இன்ஸ்பெக்டர் நமீதா சாகு. நிர்பயா ரோந்துப்படை பற்றியும் நமீதா சாகு பற்றியும் பிரதமரின் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. அதற்கு ஒன்றரை லட்சம்பேர் ‘லைக்’ செய்திருந்தனர். அதைப் பார்த்த பிரதமர் நரேந்திர மோடி, நமீதா சாகுவை ஊக்கப்படுத்த விரும்பினார். அதன்படி, நமீதா சாகுவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசி பாராட்டினார். நம்மிடம் பிரதமர்தான் பேசுகிறாரா? யாராவது மிமிக்கிரி செய்கின்றனரா? என்று ஆச்சரியமடைந்த நமீதா, பின்னர் சுதாரித்துக்கொண்டு பயமின்றி பேசினாராம். அவருடைய பணிகளுக்கு பாராட்டு தெரிவித்த மோடி, அதே வேகத்தில் அவரது பணிகள் தொடர வேண்டும் என்றும், மற்ற பெண்களுக்கும் அவர் உந்துசக்தியாக திகழ வேண்டும் என்றும் தெரிவித்தாராம். நமீதா சாகு குடும்பத்தினரின் நலன் குறித்து விசாரித்த மோடி, தனது இ-மெயில் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் அளித்து, தேவைப்படும்போது தன்னைத் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டாராம். பிரதமரே தொலைபேசியில் பேசியதால், பெண் சப்-இன்ஸ்பெக்டர் நமீதா சாகு, ஒரே நாளில் பெரும் புகழ் அடைந்து விட்டார். பேஸ்புக்கில் அவரை பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரமாக உயர்ந்து விட்டது. வாட்ஸ்அப்பிலும் மெசேஜ்கள் அதிகரித்துள்ளன. போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வரும் 80 சதவீத அழைப்புகள், அவரைப் பற்றியே உள்ளனவாம்!
நிர்பயா ரோந்துப் படை: நமீதா சாகுவுக்கு பிரதமர் மோடி பாராட்டு
Popular Categories


