ஐபிஎல் 2022 – குஜராத் vs பஞ்சாப்
– K.V. பாலசுப்பிரமணியன் –
நேற்று, மே மூன்றாம் நாள் குஜராத், பஞ்சாப் அணிகளுக்கிடையே மும்பை டி.ஒய். பட்டீல் கிரிக்கெட் மைதானத்தில், ஐ.பி.எல்லின் 48ஆவது போட்டி நடந்தது. இதுவரை ஒன்பது மேட்சுகள் விளையாடி ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்த குஜராத் அணி இன்று இரண்டாவது தோல்வியைச் சந்தித்தது. போட்டியில் குஜராத் அணி (143/8, சாய் சுதர்ஷன் 65, சஹா 21, ரபாடா 4/33) பஞ்சாப் அணியிடம் (145/2, ஷிகர் தவன் 62, ராஜபக்ஷா 40, லிவிங்ஸ்டோன் 30) தோற்றுப்போனது.
டாஸ் வென்ற குஜராத் அணி, மட்டையாட முடிவுசெய்தது. ஆனால் அந்த அணியின் மிக முக்கியமான அதிரடி மட்டையாளர்கள் ஷுப்மன் கில் (9 ரன்), ஹர்திக் பாண்ட்யா (1 ரன்), மில்லர் (11 ரன்), திவாத்தியா (11 ரன்), ரஷீத் கான் (பூஜ்யம்) ஆகியோர் இன்று சரிவர விளையாடவில்லை.
தமிழக வீரரான சாய் சுதர்ஷன் (50 பந்துகளில் 65 ரன், 5 ஃபோர், ஒரு சிக்சர்) நன்றாக ஆடினார். இதனால் குஜராத் அணி இருபது ஓவர் முடிவில் எட்டு விக்கட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ரபாடா நான்கு விக்கட்டுகள் எடுத்தார்.
அடுத்து விளையாட வந்த பஞ்சாப் அணியின் தொடக்கவீரர் ஜானி பெயர்ஸ்டொ மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஷிகர் தவானும், பானுகா ராஜபக்ஷாவும் இணைந்து நிதானமாக 87 ரன்கள் சேர்த்தனர்.
பஞ்சாப் அணியின் ரன்ரேட் குஜராத் அணியின் ரன்ரேட்டைவிட அதிகமாகவே இருந்தது. எனவே வெற்றி ஏறத்தாழ உறுதி என்றாகிவிட்ட நிலையில் 16ஆவது ஓவரில் லிவிங்ஸ்டோன் மூன்று சிக்சர்கள், இரண்டு ஃபோர் அடித்து 16ஆவது ஓவரிலேயே வெற்றி இலக்கை அணி எட்டுமாறு செய்தார்.
இந்த ஆட்டத்தில் தோற்றாலும் குஜராத் அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. ஆட்ட நாயகனாக ரபாடா அறிவிக்கப்பட்டார்.