திங்கள் கிழமை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்குகிறது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைத்திடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களிடமும் மோடி கூறியது.. “நாடாளுமன்ற அவைகளின் பொன்னான நேரம் வீணாகக்கூடாது. இந்த நேரத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். மக்களின் நன்மையை கட்சிகளின் தலைவர்கள் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் மக்களின் நம்பிக்கைகள், விருப்பங்களை நிறைவேற்ற முடியும். எனவே எல்லா கட்சிகளின் தலைவர்களுக்குமான பொறுப்பு இது. எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் முன் வைக்கும் பிரச்னைகளுக்கு போதிய முன்னுரிமை கொடுத்து விவாதம் மேற்கொள்ளப்படும்” என்றார் மோடி. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடர் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக இருக்கும். அவசரச் சட்டங்களுக்கு பதிலாக 6 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடும் என்று கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்து மோடி, வெங்கய்ய நாயுடு ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து அவையை சுமுகமாக நடத்த முயற்சி மேற்கொண்டுள்ளனர். மார்ச் 20 வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதியும், இரண்டாவது பகுதி ஏப்ரல் 20 – மே 8 வரையும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை பிப்.23-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார். 26-ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் 28-ம் தேதி மத்திய பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளன. மூன்று மாதங்கள் நடைபெறும் பட்ஜெட் தொடரில் நரேந்திர மோடி அரசு முதல்முறையாக தனது முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் பாதியிலேயே அவசரச் சட்டங்கள் சார்ந்த 6 மசோதாக்களை அரசு நிறைவேற்ற வேண்டி உள்ளது. அதன்படி காப்பீடு, நிலக்கரி துறைகள் மீதான அவசரச் சட்டங்களை இயற்ற வேண்டிய நெருக்குதல் அரசுக்கு உள்ளது. மக்களவையில் பாஜக கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளது. ஆனால், மாநிலங்களவையில் போதிய பலம் இல்லை. இதனால் மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை பாஜக கோரியுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடர்: சுமுகமாக நடக்க உதவுமாறு எதிர்க்கட்சிகளுக்கு மோடி வேண்டுகோள்
Popular Categories


