spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஉங்களால் தொழில்நுட்ப உபவாசம் இருக்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்: ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’வில் மோதி மாணவர்களுக்கு...

உங்களால் தொழில்நுட்ப உபவாசம் இருக்க முடியுமா? சிந்தித்துப் பாருங்கள்: ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’வில் மோதி மாணவர்களுக்கு சவால்!

- Advertisement -

பரிக்சா பே சர்ச்சா – எனும் நிகழ்ச்சியின் மூலம், தேசிய அளவில் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையிலும், வழிகாட்டும் படியும் பிரதமர் மோதி கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார். புது தில்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டார்கள். நாடு முழுதுமிருந்து மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மிக அழகாக தன் பதில்களை அளித்து உற்சாகமூட்டினார் பிரதமர் மோதி.

அதன் தமிழாக்கத்தை இன்று இரவு 9.30க்கு சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பியது. அதன் நிகழ்ச்சித் தொகுப்பு இங்கே…!

தேர்வுகளை எதிர்கொள்வோம் 2023

நண்பர்களே, ஒரு விஷயம் சொல்லவா?  பரீக்ஷா பே சர்ச்சா, தேர்வுகளை எதிர்கொள்வோம் எனக்கும் ஒரு தேர்வு தான் தெரியுமா?  கரவொலி ஆனா எனக்கு இந்தத் தேர்வு எழுதுவது ஆனந்தமாக இருக்கிறது.  தேசத்தின் இளைய சமூகம் தேசத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறது, மக்களிடமிருந்து, அரசுகளிடமிருந்து, என்ன எதிர்பார்க்கிறது என்ற விஷயங்கள் எனக்கு ஒரு பெரிய கஜானாவாக இருக்கின்றது.  அவர்களுடைய எண்ணங்கள், சிந்தனைகள்……… விருப்பங்கள், நாட்டங்கள்….. எதை நோக்கி இருக்கின்றன என்பது எனக்கு மிகவும் முக்கியமான விஷயங்கள், கற்றல்கள்.  சரி, அதிகம் நீட்டிக்காமல் நேரே நிகழ்ச்சிக்குச் செல்வோமா. .

மதுரையில் இருந்து அஸ்வினி கேட்ட கேள்வி…

மதுரையிலிருந்து அஸ்வினி, கேந்திரிய வித்யாலயா வில் இருந்து பேசுகிறார். 

அதிக மதிப்பெண்கள் குறித்த பெரிய எதிர்பார்ப்புகள் மாணவர்களுக்கு பெரிய மனவழுத்தத்தை அளிப்பதோடு, அவர்கள் தங்கள் கைகளில் வெட்டு ஏற்படுத்திக் கொள்ளும் அளவுக்குக் கூட கொண்டு சென்று விடுகிறது.  இந்த அதிக எதிர்பார்ப்புகள், அவை ஏற்படுத்தும் அழுத்தம் இவற்றை எப்படி சமாளிப்பது?  தில்லியிலிருந்து நவ்தேஷ் ஜாகுர், தனது மதிப்பெண்கள் குறைவாக இருக்கும் போது எப்படி பெற்றோரை சமாளிப்பது என்று கேட்டிருக்கிறார்.  பட்னாவில் 11ஆம் வகுப்பு படிக்கும் பிரியங்காவின் கேள்வி, என்னுடைய குடும்பத்தார் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்கள், இதுவே எனக்குப் பெரிய அழுத்தமேற்படக் காரணமாக இருக்கிறது, இதை நான் எவ்வாறு சமாளிப்பது?

நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகளைப் பார்த்தால், முதல் பந்திலேயே என்னை அவுட் ஆக்க நினைப்பது போல இருக்கிறது.  பெற்றோருக்கு நீங்கள் நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தால் அதில் பிழை ஏதும் கிடையாது.  ஆனால் அதே வேளையில், சமூக அந்தஸ்து காரணமாக, மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ, சமூகம் என்ன சொல்லுமோ என்ற நோக்கிலே அழுத்தம் ஏற்படுத்தினார்கள், ஏற்படுத்திக் கொண்டார்கள் என்றால் அது சரியல்ல.  வெளியே பேசுபவற்றை, பேசப்படுபவற்றை எல்லாம் மெல்ல மெல்ல தங்களுக்குள்ளே ஈர்த்துக் கொண்டு, வீட்டுக்கு வந்த பிறகு அதைக் கொட்டித் தீர்க்கிறார்கள். 

நீங்கள் நன்றாகச் செயல்பட்டாலும் கூட அவர்களுக்கு ஏமாற்றமே ஏற்படும்.  நாங்கள் அரசியலில் இருக்கிறோம், என்ன மாதிரியான அழுத்தம் ஏற்\படுத்தப்படும் என்றால், தோல்வியே கூடாது என்ற வகையில் உருவாக்குவார்கள்.  எத்தனை ஜெயித்தாலும், திருப்தியே இருக்காது.  நாம் இந்த அழுத்தத்தால் அழுந்தக் கூடாது.  நீங்கள் கிரிக்கெட் பார்க்க அரங்கம் சென்றிருந்தால், ஒரு வீரர் நுழையும் போது, ஃபோர், சிக்ஸர் என்று பார்வையாளர்கள் கத்துவார்கள்; ஆனால் பேட்ஸ்மேனுடைய கவனம் முழுக்க பந்தின் மீதும், வீசுபவரின் மனதை ஆராய்வதிலுமே இருக்கும், ரசிகர்களின் கத்தொலி மீது அல்ல.  அழுத்தங்களின் அழுத்தத்தில் வராதீர்கள், ஆனால் சில வேளை அவற்றை அலசிப் பாருங்கள், அதுவே உங்க்ள் பலமாக மிளிரும்.  சமூக அழுத்தத்தால், பாதிக்கப்படாதீர்கள்.  அதே வேளையில் குறைவாகவும் குழந்தைகளை மதிப்பிடவும் வேண்டாம்.  கரவொலி

ஆருஷி டாகுர், சம்பாவில் இருந்து கேட்ட கேள்வி…

சம்பாவிலிருந்து ஆருஷி டாகுர், கேந்திரிய வித்யாலயாவில் 11ஆம் வகுப்பு படிக்கிறார். 

நான் படிப்பை எங்கிருந்து தொடங்க என்ற குழப்பம் என் மனதில் எப்போதும் உண்டு.,  எது எனக்கு புரியவில்லையோ அதைப் புரிந்து கொள்ளும் நெருக்கடி எப்போதும் மனதிலே இருக்கிறது. வழிகாட்டுங்கள் பிரதமரே.  ராய்புரிலிருந்து அதிதி, 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவி.  நான் நிறைய செய்ய விரும்புகிறேன், ஆனால் எதையும் நிறைவாகச் செய்ய முடிவதில்லை.  செயல்களைத் தள்ளிப்போட்டு விடுகிறேன். தீர்வு கூறுங்கள்.

பணியைச் செய்வது களைப்பை ஏற்படுத்தக் கூடாது, பணியாற்றாமல் இருப்பதே களைப்பை, அயர்வை ஏற்படுத்தும்.  ஆகையால் பணியாற்ற முதலில் தொடங்குங்கள்.  அடுத்ததாக, ஒவ்வொரு பணிக்கும் கடந்த காலத்தில் எத்தனை நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என்பதன் அடிப்படையில் நீங்கள் ஆற்ற வேண்டிய பணிக்கான ஒரு பட்டியலைத் தயாரித்துக் கொள்ளுங்கள்.  எது உங்களுக்கு அதிக விருப்பமான பணியோ, அதற்கே அதிக நேரம் ஒதுக்கியிருப்பது உங்களுக்கே புரியும்.  இதிலே சில விஷயங்கள் குறைவாகப் பிடித்திருக்கும், பட்டியலில் கீழே இருக்கும், குறைவான நேரமே அளித்திருப்பீர்கள், இது உங்களுக்கு நெருக்கடி, சுமையை ஏற்படுத்தும்.  ஆகையால் நீங்கள் மிகக் குறைவாகப் பிடித்த விஷயத்தை முதலில் ஏற்றுங்கள், பிறகு மிகவும் விருப்பமான விஷயம், பிறகு அடுத்த குறைவாகப் பிடிக்கும் விஷயம், இப்படிப் பட்டியிலடுங்கள். 

பிரச்சனையை முறையாகத் தீர்ப்பது என்பது முக்கியம்.  காற்றாடி விடும் போது, நூல் கண்டு சிக்கிக் கொண்டால், அதை கன்னாபின்னாவென்று நாலா திசையிலிருந்தும் பிடித்து இழுத்தால், அது இடியாப்பச் சிக்கலாகி விடுவதைப் போல அல்லாமல், மெதுவாக, ஒவ்வொரு நூலாகச் சிக்கலாகப் பொறுமையாகப் பிரித்தெடுத்தால், நூல்கண்டு சேதமாகாமல் நமக்குக் கிடைக்கும்.  நிதானமாகத் தீர்வு காண வேண்டும்.  அடுத்ததாக, நீங்கள் உங்கள் வீட்டிலே, உங்கள் தாயாரின் வேலையை கவனித்திருக்கிறீர்களா? 

உங்களுடைய தேவை என்ன, எப்போது என்பதறிந்து அதற்கேற்ப நீங்கள் பள்ளிக்குச் செல்லும் முன்பு அனைத்தையும் தயாராக வைத்திருப்பார்.  இது அவருடைய அற்புதமான கால மேலாண்மை.  எந்த வேலைக்கு எத்தனை நேரம் என்று நன்றாகத் தெரியும், எந்த அழுத்தமும் இல்லாமல் தன் வேலையை, அலுப்பேதும் இல்லாமல் செய்வார் அவர்.  கூடுதல் நேரம் கிடைத்தால் அதிலும் ஏதாவது உருப்படியாகச் செய்து விடுவார்.  நேர மேலாண்மை மட்டுமல்ல, நேரத்தின் நுண்ணிய மேலாண்மை….. நீங்கள் உங்கள் தாயை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே போதும், இது உங்கள் உள்ளங்கை நெல்லிக்கனியாகி விடும். கரவொலி

சதீஷ்கட் பஸ்தர் பகுதியைச் சேர்ந்த ரூபேஷ் கஷ்யப் எழுப்பிய வினா…

பஸ்தர், சத்திஸ்கட்டைச் சேர்ந்த 9ஆவது வகுப்பைச் சேர்ந்த ரூபேஷ் கஷ்யப்பின் வினா,

தேர்வுகளின் போது நேர்மையற்ற வழிமுறைகளை நான் எவ்வாறு தவிர்ப்பது?  ஒடிஷாவின் கோனார்கைச் சேர்ந்த தன்மய், காப்பி அடித்த, நேர்மையற்ற வழிமுறைகள் ஆகியவற்றிலிருந்து எப்படி தப்புவது என்று கேட்டிருக்கிறார்.

தேர்வுகளின் தவறான வழிமுறைகளுக்கு எதிரான எண்ணம் மாணவர்களுக்கு எழுவது எனக்கு சந்தோஷத்தை அளிக்கிறது.  முன்பெல்லாம் திருட்டுத்தனமாக காப்பி அடிப்பார்கள்; என்ன இப்போதெல்லாம் தைரியமாகச் செய்து விட்டு, சூப்பர்வைசரை முட்டாளாகி விட்டதாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.  இதிலே அடிப்படை விழுமியத்தில் மாற்றம் ஏற்படுகிறது, இதுதான் கவலைதரும் விஷயம்.   ட்யூஷன் எடுக்கும் சில ஆசிரியர்கள், தங்களிடம் படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவும் இப்ப்படிப்பட்ட தவறான பழக்கத்திற்கும் ஊக்கமளிக்கிறார்கள். 

சில மாணவர்கள் நன்றாகப் படித்தாலும், இப்படிக் காப்பி அடித்து எழுதுவதில் புதியபுதிய உத்திகளைக் கையாள விரும்புகிறார்கள்.  காப்பி அடிப்பதில் தங்கள் படைப்புத் திறனை வீணாக்காமல், கற்றலில் செலவு செய்தால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும், யாராவது இதை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.  இன்று உலகம் மாறி விட்டது, ஒரு தேர்வு இரு தேர்வுகள் அல்ல, ஏராளமான தேர்வுகள்.  எத்தனை தேர்வுகளில் காப்பியடிக்க முடியும்?  ஆகையால் காப்பியடிப்பவரால் ஒன்றிரண்டு தேர்வுகளில் வேணுமானால் தேர்ச்சி பெறலாம், வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது, எங்காவது சிக்கிக் கொள்வார்.  

உழைக்கும் மாணவர்களின் வாழ்விலே உங்கள் உழைப்பு வண்ணங்களை நிறையச் செய்யும்.  உங்களுக்குள்ளே இருக்கும் சக்தி தான் உங்களை முன்னேற்றிச் செல்லும்.  தேர்வுகள் வரும் போகும் ஆனால் வாழ்க்கை நிரந்தரமானது, உயிர்ப்பு நிறைந்தது.  ஆகையால் யாராவது குறுக்குவழியைப் பின்பற்றினால் அதனால் நீங்கள் அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.  நீங்கள் உங்கள் வழியிலே செல்லுங்கள், உங்கள் உழைப்பிற்கு ஏற்ப உன்னதம் கிடைக்கும். 

கேரளம் கோழிக்கோட்டில் இருந்து தேஜஸ் கேட்ட கேள்வி…

நான் கேரளத்தின் கோழிக்கோட்டில் கேந்திரிய வித்யாலயாவில் 9ஆம் வகுப்பு படிக்கும் தேஜஸ். 

ஹார்ட் வர்க், ஸ்மார்ட் வர்க் இவை இரண்டும் அவசியமானவையா?  எது முக்கியமானது?  வழிகாட்டுங்கள் ஐயா.

சிறுவயதில் நீங்கள் ஒரு கதை படித்திருக்கலாம்.   ஒரு ஜாடியில் தண்ணீர் அடியில் இருந்தது,இதைப் பார்த்த ஒரு காகம் ஜாடிக்குள்ளே கூழாங்கற்களை ஒன்றொன்றாகப் போட்டது, மெல்ல மெல்ல நீர் மேலே எழும்பி வந்தது, காகம் தாகம் தணித்துக் கொண்டது, இதை நீங்கள் ஹார்ட் வர்க் என்பீர்களா, ஸ்மார்ட் வர்க் என்பீர்கள்?  Response.   காகம் இப்படிச் செய்த காலத்தில் ஸ்ட்ரா எல்லாம் இல்லை.  சிலர் கடுமையாக உழைப்பவர்கள், சிலர் புத்திசாலித்தனமாக உழைப்பவர்கள், சிலர் புத்திசாலித்தனமாக கடுமையாக உழைப்பவர்கள்.  கரவொலி 

அந்த வகையிலே புத்திசாலித்தனமான கடும் உழைப்பை எப்படிப் புரிவது என்பதைக் காகம் நமக்குக் கற்பிக்கிறது.   பலகாலம் முன்பாக, நாங்கள் ஆழமான கிராமப் பகுதிக்கு ஜீப்பில் செல்ல வேண்டியிருந்தது, திடீரென்று ஜீப் பழுதாகிப் போனது, இரண்டு மணிநேரம் போராடிப் பார்த்த பிறகு வேறு வழியில்லாமல், ஒரு மெக்கானிக்கை வரவழைத்தோம், அவர் இரண்டே நிமிடங்களில் ஜீப்பைப் பழுது பார்த்து, கூலியாக 200 ரூபாய் கேட்டார். இரண்டு நிமிட வேலை தானே என்ரு நாங்கள் கூறிய போது, ஐயா இதற்கு வேண்டுமானால் இரண்டு நிமிடத்தில் தீர்வு கிடைத்திருக்கலாம், ஆனால் இதன் பின்னால் 50 ஆண்டுக்கால அனுபவம் உள்ள்து ஐயா. 

நாங்கள் 2 மணிநேரமாகக் கடுமையாகப் போராடியும் பலனில்லாத போது, இரண்டே நிமிடங்களில் அவர் சரி செய்து கொடுத்தார்.  இது புத்த்சாலித்தனமான வேலையின் பலன்.  இன்னொரு விஷயம், இப்போது கிரிக்கெட்டையே டுத்துக் கொள்வோமே!!  ஒரு விக்கெட் கீப்பர் மணிக்கணக்கசக குத்தவைத்து உட்கார்ந்த நிலையில் இருக்கும் வகையில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார், இதுவே பந்து வீச்சாளருக்கான தேவை வேறு.  ஆகையால் நாமும் தேவை என்ன இருக்கிறதோ, அதற்கேற்பவே நம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். 

ஒன்றைச் சாதிக்க வேண்டும் என்றால் நாம் இலக்கைக் குறித்து அதை நோக்கியே பயணிக்க வேண்டும், செயல்பட வேண்டும்.  புத்திசாலித்தனமான கடும் உழைப்பில் ஈடுபட வேண்டும்.  அப்போது வெற்றி நிச்சயம்.  கரவொலி

ஹரியாணா, குருகிராமைச் சேர்ந்த ஜோவிதா பாத்ரா எழுப்பிய வினா…

குருகிராம், ஹரியாணாவைச் சேர்ந்த 9ஆவது வகுப்பு படிக்கும் ஜோவிதா பாத்ரா.  ஒரு சராசரி மாணவியான நான் எவ்வாறு தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட முடியும் என்று வழிகாட்டுங்கள்.

முதலில் நீங்கள் சராசரி என்று தெரிந்து கொண்டதற்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.  பல நேரங்களில் சராசரிக்கும் குறைவாக இருக்கும் மானவர்கள் தங்களை சராசரிக்கும் உயர்வாகக் கருதிக் கொள்வார்கள்.  நம்முடைய திறன் திறமை பற்றிய நிதர்சனத்தை நாம் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு விட்டால், அதற்கேற்ப நம் வழிமுறையை நம்மால் தகவமைத்துக் கொள்ள முடியும்.  

உங்கள் குழந்தைகளை சரியாக மதிப்பீடு செய்யுங்கள் என்று பெற்றோரிடம் கேட்டுக் கொள்கிறேன்.  பொதுவாக நாமனைவரும் சாதாரணமானவர்கள், அசாதாரணமானவர்கள் மிகக் குறைவு.  ஆகையால் சாதாரணமானவர்கள், அசாதாரணமான செயல்களைப் புரியும் போது, அவர்கள் பெரிய உயரங்களை எட்டுகிறார்கள்.  கரவொலி

என்று நமது திறமைகள் வரயறைகள் நமக்குத் தெரிகிறதோ, அன்றே நாம் சாதனையாளர்களாகி விடுவோம்.  யாருக்கு இது புலப்படவில்லையோ, அவர்கள் பல தடைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்.  உலகின் வெற்றியாளர்கள் அனைவரும் சாதாரணமானவர்கள், அசாதாரணமான செயல்களைச் செய்தே சாதனை படைத்திருக்கிறார்கள்.  இப்போதெல்லாம் குறிப்பாக கொரோனாவிற்குப் பிறகு உலகப் பொருளாதார அளவீடுகள், நிலை குறித்து அதிக விவாதங்கள் நடைபெறுகின்றது, பொருளாதாரத்தைச் சரி செய்ய அநேக வல்லுனர்கள், நோபல் பரிசு பெற்ற மேதைகள் இருக்கிறார்கள். இவர்கள் வழிகாட்டலாம், இப்படிச் செய்தால் சீர் செய்யலாம்.   பொருளாதார ஞான உபதேசத்தை சுலபமாக வழங்குபவர்கள், ஒவ்வொரு தெருவிலும் ஏராளமாக இருப்பார்கள்.  ஆனால் உலகின் பொருளாதார அமைப்பிலே பாரதம் ஒரு ஒளிக்கீற்றாகப் பார்க்கப்படுகிறது என்பதை நீங்கள் உணரலாம். கரவொலி

2-3 ஆண்டுகள் முன்பு நமது அரசு பற்றி என்ன சொன்னார்கள், இவர்களிடம் பொருளாதார வல்லுனர் இல்லை, மிகவும் சராசியான திறன் ப்டைத்தவர்கள், பிரதமருக்கு பொருளாதாரமே தெரியாது என்றெல்லாம் சொன்னார்கள்.  ஆனால் இன்று அதே தேசம் உலக அரங்கிலே பிரகாசிக்கிறது.  ஆகையால் நாம் அசாதாரணமானவர்கள் இல்லை என்ற நெருக்கடியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் நண்பர்களே..

உங்களுக்குள்ளே கண்டிப்பாக ஒரு அசாதாரணமான திறமை இருக்கும்,.  அதே போல யார் அசாதாரணமானவரோ அவருக்குள்ளேயும் சாதாரணமான ஒருவர் கண்டிப்பாக இருப்பார்.  இறைவன் அனைவருக்கும் ஒரு சிறப்பான திறமையை அளித்திருக்கிறார், இதை நாம் அடையாளம் கண்டுகொண்டால் மட்டும் போதும், வெற்றி நிச்சயம் என்பதை நான் உறுதிபட நம்புகிறேன். நன்றி. கரவொலி

தில்லியைச் சேர்ந்த மன்னத் பாஜ்வா கேட்ட கேள்வி…

தில்லியைச் சேர்ந்த மன்னத் பாஜ்வா… விசாலமான பாரதத்தின் பிரதமர் நீங்கள், உங்களைப் பற்றிய எதிர்மறை கருத்து, விமர்சனம் ஆகியவை ஏற்படுத்தக்கூடிய பாதிப்பிலிருந்து எப்படி உங்களை விடுவித்துக் கொள்கிறீர்கள்? 

11ஆம் வகுப்பு படிக்கும் , தெற்கு சிக்கிமைச் சேர்ந்த அஷ்டமியின் வினா

ஊடகமும் எதிர்கட்சிகளும் உங்களைத் தூற்றும் போது இதை எப்படி நீங்கள் எதிர்கொள்கிறீர்கள்?  உங்களுடைய விடை, நான் என் காப்பாளர்கள்=ஆசிரியர்கள் ஏற்படுத்தக்கூடிய அழுத்தம் ஏமாற்றங்களை சமாளிக்க எனக்கு உதவும்.  வழிகாட்டுங்கள் ஐயா. 

குஜராத்தின் அஹ்மதாபாதைச் சேர்ந்த குன்கும் சோலங்கி… 

இத்தனை பெரிய தேசத்தின் பிரதமர் என்ற வகையிலே நீங்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், எப்படி எதிர்கொள்கிறீர்கள்? 

பெங்களூரூவைச் சேர்ந்த 12ஆவது படிக்கும் ஆகாஷ் தரிவாவின் வினா. 

நீங்கள் எதிர்கட்சியினரின் ஒவ்வொரு பழியுரையையும் டானிக்காக எப்படி ஆக்கிக் கொள்கிறீர்கள் என்பதை உங்களிடம் நான் கற்க வேண்டும் என்று எனது பாட்டி கூறுகிறார்.  நீங்களே வழிகாட்டுங்களேன்.

உங்களுக்கு வினாத்தாள் கையிலே கிடைக்கும் போது, அதிலே சில வினாக்கள் உங்கள் பாடத்திட்டத்தீலேயே இல்லை என்றால், அது அவுட் ஆஃப் சிலபஸ் என்பீர்கள் இல்லையா?   App.  இருந்தாலும் நீங்கள் எதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறீர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.  ஆரோக்கியமான ஜனநாயகத்திற்கு விமர்சனம் என்பது சுத்தி யக்யம் ஆகும். கரவொலி

விமர்சனம் ஜனநாயகத்தின் முதன்மையான விதியாகும்.  தொழில்நுட்பத்தில் ஓபன் சோர்ஸ் உண்டு.  எங்காவது தடங்கல் ஏற்பட்டால், அவரவர் தங்களுடைய பங்களிப்பை அளித்து அது மகத்தான ஒரு மென்பொருளாக, பயன்பாடாக ஆகி விடுகிறது.  ஆனால் சில வேளைகளில், விமர்சனம் செய்பவர் யார் என்ற விஷயத்தில் சிக்கல் ஏற்படுகிறது.  விமர்சிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு விமர்சிப்பவர்களின் விமர்சனங்களை ஒரு மூலையில் போட்டு விடுங்கள், பொருட்படுத்தாதீர்கள். 

ஆனால் வீட்டிலே விமர்சிக்கப்படுகிறீர்களா?  என்றால், இல்லை என்பதே கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.  ஏனென்றால் விமர்சிக்க வேண்டும் என்றால்  பெற்றோர் இதுபற்றி அதிகம் தெரிந்திருக்க வேண்டும், உங்களைப்பற்றி, உங்கள் நேரம் பற்றி, உங்கள் மொபைல் பயன்பாடு பற்றி, ஆசிரியர்களின் கருத்துக்கள், நண்பர்களின் கருத்துக்கள் அனைத்தும் தெரிந்த பிறகு பெற்றோர் உங்களிடம் அன்போடு விமர்சிக்கும் போது, அது பதிவாகிறது.  ஆனால் இன்று பெற்றோரிடமோ இப்போதெல்லாம் விமர்சனம் செய்யும் அளவுக்கு நேரம் இருப்பதில்லை, அதிக நேரம் செலவிடுவதில்லை, குத்திக் காட்டுகிறார்கள். 

குத்திக் காட்டுவது விமர்சனம் அல்ல.  உங்கள் குழந்தைகளின் நலன்களின் பொருட்டு தயவு செய்து குத்திக் காட்டாதீர்கள் என்று பெற்றோரிடம் நான் வேண்டிக் கொள்கிறேன்.  நீங்கள் பாராளுமன்ற நடவடிக்கைகளை அந்த டிவியிலே பார்த்திருக்கலாம்.  சிலர் அருமையான தயாரிப்புகளோடு வந்திருப்பார்கள்.  ஆனால் இயல்பு காரணமாக, எதிர்கட்சிக்காரர்கள் சிலர் ஏதாவது உங்களைச் சீண்டச் சொல்லுவார்கள், இது கண்டிப்பாக உங்களைக் குத்தும்.  நம்முடைய உறுப்பினர் உடனே அந்த சீண்டலுக்கு பதில் அளிக்கத் தொடங்கி, தன்னுடைய தயாரிப்பு உரையை மறந்து விடுவார்.   கரவொலி

ஆனால் கருமமே கண்ணாயிருக்கும் உறுப்பினர், எதிர்தரப்பின் சீண்டலை நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, தன் கருமத்திலேயே கண்ணாயிருப்பார்.  அது போல நாமும் நமது கவனத்தை இழக்கக்கூடாது.  அடுத்ததாக, சரியான விமர்சனம் செய்ய வேண்டுமென்றால், கடுமையாம உழைக்க வேண்டும்.  இதற்குப் பலர் தயாரில்லை.  ஆகையால் பெரும்பாலானோர் குறுக்குவழியைப் பின்பற்றி, அவதூறுகளை வாரி இறைக்கிறார்கள். 

விமர்சனம் மற்றும் அவதூறு இடையே மிகப்பெரிய இடைவெளி இருக்கிறது.   விமர்சனம் நமக்கு முழுமை அளிக்கிறது, அவதூறு வெறும் குப்பை.  ஆகையால் நாம் விமர்சனத்திற்கு முழுமையான மதிப்பளிக்க வேண்டும், அவதூறை சற்றும் கருத்தில் கொள்ளத் தேவையில்லை.  நம்மிடம் நாணயம் இருந்தால், கண்டிப்பாக அவதூறுகளைப் பொருட்படுத்தாதீர்கள் நன்பர்களே.  கரவொலி

போபாலைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் தீபேஷ் அஹிர்வாலின் வினா. 

சமூக வலைத்தளங்கள், மெய்நிகர் விளையாட்டு போன்ற பல திசைதிருப்பும் விஷயங்கள் இருக்கும் போது எப்படி கவனச்சிதறல் ஏற்படாமல் இருப்பது? 

10ஆம் வகுப்பு படிக்கும் அஜிதாப் குப்தாவின் வினா,

தொழில்நுட்பம் காரணமாக கவனச்சிதறல் குறைவாக இருக்கச் செய்வது எப்படி? 

தில்லியின் காமாட்சி ராயின் வினா,

தேர்வுக்காலங்களில் கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்க மாணவர்கள் என்ன செய்யலாம்? 

பெங்களூருவைச் சேர்ந்த மனன் மித்தல்,

இணையவழியில் படிக்கும் போது, இணையவழி விளையாட்டுக்களால் கவனச்சிதறலால் எப்படித் தப்புவது? 

முதன்மையாக நீங்கள் தீர்மானம் செய்து கொள்ள வேண்டியது என்னவென்றால், நீங்கள் புத்திசாலியா அல்லது கருவிகள் புத்திசாலியா?  பல வேளைகளில் உங்களை விட கருவிகள் புத்திசாலித்தனமானவை என்று நீங்கள் கருதுவது தான் பிழையே.  இறைவன் உங்களைப் படைத்திருக்கிறான், கருவிகளை விட நீங்களே புத்திசாலி.  கருவிகள் உங்கள் செயல்பாட்டை துரிதப்படுத்த மட்டுமே.  அடுத்ததாக, தேசத்திற்கு கவலை அளிக்கும் விஷயம்…….

அதாவது பாரதத்தில் சராசரியாக, மக்கள் 6 மணி நேரம் திரைக்கு முன்பாகச் செலவழிக்கிறார்களாம்.  நமது படைப்புத்திறன் வீணாக 6 மணிநேரம் ஒரு திரைக்கு முன்பாக, ஸ்கிரீனுக்கு முன்பாக செலவாகிறது என்பது மிகவும் கவலையளிக்கும் விஷயம்.  ஒரு வகையிலே, கருவி நம்மை அடிமையாக்குகிறது.  நாம் அதன் அடிமைகளாக வாழ முடியாது.  இறைவன் நமக்கென்று ஒரு தனி ஆளுமை அளித்திருக்கிறான்.  ஆகையால் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்.  நான் மிக ஆக்டிவாக, சமூக வலைத்தளங்களில் இருந்தாலும், பாருங்கள், என் கைகளிலே செல்பேசி கிடையாது. 

ஏன் இல்லை?  ஏனென்றால் அதற்கென குறித்த காலம் மட்டுமே அளிக்கிறேன்.  சிலர் சற்று அதிர்வு ஏற்பட்டாலும், உடனே மொபைலை எடுத்துப் பார்த்து விடுவார்கள், பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாய உணர்வு உண்டாகும்.  நான் ஒரு சுதந்திர மனிதன் கரவொலி எனக்கென ஒரு பிரத்யேகமான இருப்பு உண்டு, அதிலிருந்து என் வேலைக்கான விஷத்திற்கு மட்டுமே கருவிகளைப் பயன்படுத்துவேன்.  நான் தொழில்நுட்பத்திடமிருந்து தப்பியோடுபவனல்ல.  ஆனால், நான் அதன் பயன்பாடு, தேவை ஆகியவற்றை எனக்குத் தேவையான வகையில் மட்டும் செய்வேன். 

உங்களுக்கு சேவை அளிக்கும் கருவி உங்களுக்கு நிறைவை அளிக்காது.  உங்களுக்குள்ளே இருக்கும் திறன்கள் திறமைகளை நீங்கள் நிறைவு செய்தால் தான் உங்களுக்கு நிறைவேற்படும்.  முன்பெல்லாம் வாய்ப்பாடு சொல்வது என்பது மிக சாதாரணமான விஷயம்.  வெளிநாடுகளில் வாய்ப்பாடு சொல்லும் நம் பிள்ளைகளைப் பார்த்து வியந்து போவார்கள்.  இப்போதோ, வாய்ப்பாடு சொல்லும் பிள்ளைகளை இந்தியாவிலே பார்ப்பதே கூட அரிதாக இருக்கிறது, ஏன்?  கருவிகள் வந்து விட்டனவே!!  நாம் நமது திறன்கள்=-திறமைகளை இழந்து வருகிறோம்.  நமது திறன்கள்+திறமைகளை இழக்காமல் நமது திறன்கள்=திறமைகளை அதிகப்படுத்த, விழிப்போடு நாம் முயற்சியில் ஈடுபட வேண்டும்.  தொடர்ந்து ந்ம்மை நாமே சோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்.  இப்போதெல்லாம் செயற்கை நுண்ணறிவு வேறு வந்து விட்டது.  இதில் எல்லாம் நீங்கள் சிக்கிக் கொண்டீர்கள் என்றால், உங்கள் படைப்பாற்றல், படைப்புத்திறன் எல்லாம் மறைந்துவிடும்.

அடுத்ததாக, நமது பண்டைய ஆரோக்கிய சாஸ்திரத்தில் உபவாசம் தொடர்பான பாரம்பரியம் உண்டு.  இதைப் போலவே வாரத்தில் ஒரு நாள், அல்லது ஓர் நாளில் சில மணிநேரம் என தொழில்நுட்ப உபவாசம் இருக்க முடியுமா, சிந்தித்துப் பாருங்கள். கரவொலி

அத்தனை நேரம் நீங்கள் தப்பிப்பீர்கள்.  பல குடும்பங்களில் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பு கூட வீட்டில் 10ஆம் 12ஆம் வகுப்பு படிக்கும் பிள்ளைகளுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகிறது, டிவிக்கு உபவாசம் ஏற்படுத்த முடிகிறது, ஆனால் டிஜிட்டல் உபவாசம் முடியுமா?  இது ஏற்படுத்த்க்கூடிய பலனை கவனியுங்கள்.  மெல்ல மெல்ல இதை அதிகரிக்க உங்கள் மனது விரும்பும்.  இதைப் போலவே நமது குடும்பங்களும் சிறுத்துக் கொண்டே செல்கின்றன. 

குடும்பங்களும் இந்த டிஜிட்டல் உலகில் சிக்குகின்றன.  ஒரே வீட்டில், ஒரே அறையில் உறுப்பினர்கள் இருந்து கொண்டு, ஒருவர் பிறருக்கு வாட்ஸப்பில் தகவல் அனுப்புகிறார்கள்.  அனைவரும் ஒரே அறையில் இருந்தாலும், அவரவர் கைகளில் இருக்கும் திரையிலே மூழ்கியிருக்கிறார்கள்.  இது சரியா சொல்லுங்கள்?  இது ஒரு நோய், இந்த நோயிலிருந்து நாம் விரைவாக விடுதலை அடைய வேண்டும்.  வீட்டிலேயும் கூட தொழில்நுட்பம் இல்லாத இடம் என்ற ஒன்றை நாம் ஏற்படுத்தினால், மெல்லமெல்ல வாழ்க்கையை வாழும் ஆனந்தம் நமக்குள் ஏற்படுவதை நம்மால் உணர முடியும்.  ஆனந்தம் ஏற்பட்டால், தொழில்நுட்பத்தின் அடிமைத்தளையிலிருந்து நீங்கள் விரைவாக வெளியேறுவீர்கள். கரவொலி

ஜம்மு கஷ்மீரைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு படிக்கும் நிதாவின் வினா,

கடுமையாக உழைத்த பிறகும் சரியான பலன்கள் கிடைக்காத நிலையை எப்படி சமாளிப்பது? 

ஹரியாணாவின் பல்வலைச் சேர்ந்த 12ஆவது படிக்கும் பிரஷாந்த்,

நெருக்கடியான மனோநிலை தேர்வுகளின் முடிவுகளை எப்படி பாதிக்கிறது? 

தேர்வு எழுதிவிட்டு வரும் மாணவர்கள் வீட்டுக்கு வந்து கண்டிப்பாக எனக்கு 90 மார்க் வரும் என்று சொல்லுவார்கள்.  சில வேளைகளில் ஏன் இப்படி சொல்லுவார்கள் என்றால், பெற்றோர் என்னவோ திட்டத் தான் போகிறார்கள், ஒரு மாதம் கழித்துத் திட்டட்டுமே, அதுவரை நிம்மதியாக இருக்கலாமே என்று தான்.  குடும்பத்தார் என்னவோ, உங்கள் பேச்சை மதித்து, சந்தோஷப்படுவார்கள், தங்கள் நண்பர்களிடம் நம்பிக்கையோடு நீங்கள் சொல்லுவதை இன்னும் கொஞ்சம் தங்கள் பங்குக்குச் சேர்த்துச் சொல்லுவார்கள். 

ஏதோ தங்கள் மகன் முதல் அல்லது இரண்டாவத் இடத்தைத் தவிர வேறு எதையும் வாங்கவே போவதில்லை என்பது போல.  ஆனால் முடிவு வரும் போது 40-45 மார்க் நீங்கள் பெறும் போது, புயலடிக்கத் தொடங்குகிறது.  ஆகையால், முதலில் உண்மையை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தைக் கைவிடக்கூடாது.  எத்தனை காலம் தான் பொய்யோடு வாழ ம்டியும்!!  மாறாக நீங்கள் முயன்றும் சரியாக எழுதவில்லை என்பதை நேர்மையாகச் சொன்னீர்கள் என்றால், முடிவுகள் வரும் நாளன்று நெருக்கடி இல்லை என்பதோடு, ஒரு வேளை கூடுதலாக மதிப்பெண்கள் கிடைத்தாலும் கூட, சற்று சந்தோஷமும் பெற்றோருக்கு ஏற்படும்.  அடுத்ததாக அழுத்தம். 

உங்கள் மனங்களிலே உங்கள் நண்பர்கள் நிறைந்திருக்கிறார்கள்.  உங்கள் நண்பர்களுடனான மானசீகமான போட்டாபோட்டியிலேயே நாம் இருக்கிறோம்.  நாம் நமக்காக வாழ வேண்டும், நமக்குள்ளே வாழ வேண்டும், நம்மவர்களிடமிருந்து கற்றுக் கொண்டு வாழ வேண்டும்.  அனைவரிடமிருந்தும் கற்க வேண்டும்.  ஆனால் அடிப்படையில் நம்மிடத்திலே இருக்கும் திறன்கள்=-திறமைகளைச் சார்ந்து இருக்க வேண்டும்.  இப்படிச் செய்தால், அழுத்தத்திலிருந்து விடுபடும் வாய்ப்புகள் அதிகரிக்க்கும்.  மேலும் வாழ்க்கை தொடர்பான நமது கண்ணோட்டம் என்னது?  இந்தத் தேர்வில் தோல்வி என்றால் என் வாழ்வே அஸ்தமிக்கும் என்ற நினைப்பு வந்தால், அழுத்தம் மட்டுமே மிஞ்சும். 

வாழ்க்கை என்றுமே ஒரே நிலையத்தில் மட்டுமே நிற்பதில்லை.  அது சென்றால் இன்னொரு ரயில். கரவொலி தேர்வுகள் வாழ்க்கையில் முடிவல்ல நண்பர்களே!!  நான் வாழ்க்கையை வாழும் வழியை அறிவேன்.  எதுவாக இருந்தாலும், இந்தச் சங்கடத்தையும் என்னால் எதிர்கொள்ள முடியும், நான் எதிர்கொள்வேன் என்று தீர்மானித்தால், முடிவுகள் பற்றிய அழுத்தம் ஒரு அழுத்தமல்ல.  கரவொலி

தெலங்கானாவின் ஆர். அக்ஷ்ரா ஸ்ரீ,

9ஆம் வகுப்பு படிக்கிறேன்.  ஏன் நாங்கள் பல மொழிகளில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். ?

போபாலைச் சேர்ந்த ஹ்ரித்திகா கோட்கே ஆகியோரின் வினா

ஏன் நாங்கள் பல மொழிகளில் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.?

மிக அருமையான வினாக்கள்.  உங்கள் கவனத்தை ஓரிடத்தில் குவியுங்க்ள் என்று முன்பு நான் உங்களிடம் கூறினேன், ஆனால் இப்போது உங்கள் கவனத்தைப் பரவச் செய்யுங்கள் என்கிறேன்.  பாரதம் பன்முகத்தன்மை கொண்ட தேசம், பல நூறு மொழிகளும், பல்லாயிரம் பேச்சுவழக்குகளும் கொண்ட, நிறைவான வளம் உடைய தேசம், இது நமக்குப் பெருமிதம் அளிக்கும் விஷயம்.  யாராவது ஒரு அயல்நாட்டவர் உங்களைச் சந்திக்க நேர்ந்தால், அவர் உங்களைப் பார்த்து நமஸ்தே என்பார்.  உச்சரிப்பு முன்னேபின்னே இருக்கலாம், ஆனால் கூறுவார்.  இது உங்களை அவருக்கு நெருக்கமாக உங்களை உணர வைக்கும். 

எப்படி இசைக்கருவிகளைக் கற்றுக் கொண்டு உங்கள் திறமைகளை நீங்கள் வளர்த்துக் கொள்வீர்களோ, அப்படியே அண்டை மாநில மொழிகளைக் கற்று உங்களை நீங்கள் வளப்படுத்திக் கொள்வதில் தவறில்லையே!!  முயல வேண்டும்.  மொழியைக் கற்பது என்பது பேசும் சில வாக்கியங்களைக் கற்றோம் என்பதல்ல.  ஒவ்வொரு மொழிக்குப் பின்னாலும் ஒரு இடைவிடாத, தொன்மையான, பிரவாஹமான ஓட்டம் இருக்கிறது, அனுபவப் பெருக்கு இருக்கிறது, சங்கடங்களை எதிர்கொள்ளும் சிந்தனைப் பெருக்கு இருக்கிறது.  இவை தான் ஒரு மொழியாக வெளிப்படுகிறது. 

ஒரு மொழியை நீங்க்ள் கற்கும் போது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான அந்த மொழி, பாரம்பரியத்தின், கலாச்சாரத்தின் ஒரு வாயில் திறக்கிறது என்று பொருள்.  எனக்குப் பல வேளைகளில் துக்கம் ஏற்படுவதுண்டு.  நமது தேசத்தின் பழைமையான ஒரு தொல்லியல் எச்ச்சம் எங்காவது இருந்தால், பெருமிதம் ஏற்படும் அல்லவா?  அதே போல உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி, ஒரு தேசத்திடம் இருக்கிறது என்றால், அந்த தேசம் பெருமிதம் கொள்ள வேண்டுமா இல்லையா?  கரவொலி

நெஞ்சை நிமிர்த்தி உலகத்தாரிடம் சொல்ல வேண்டுமா இல்லையா, உலகின் மிகத் தொன்மையான மொழி எங்களிடம் உண்டு என்று சொல்ல வேண்டுமா இல்லைய?   நமது தமிழ் மொழி தான் உலகிலேயே மிகத் தொன்மையான மொழி, உங்களுக்குத் தெரியுமா?  இத்தனை பெரிய சொத்து தேசத்திடம் இருக்கிறது.  இத்தனை பெரிய கௌரவம் தேசத்திடம் இருக்கிறது. 

நாம் நெஞ்சை நிமிர்த்தி உலகிலே கூறுகிறோம் இல்லையா?  கடந்த முறை ஐ.நா.வில் உரையாற்றும் வேளையிலே வேண்டுமென்றே சில தமிழ்ச்சொற்களைக் கூறினேன்.  ஏனென்றால் நான் உலகத்தாரிடம் தெரிவிக்க விரும்பினேன், என்னுடைய தமிழ் மொழி உலகின் மிகச் சிறப்பான மொழி, மிகத் தொன்மையான மொழி இது எங்கள் தேசத்தின் தமிழ் மொழி என்று கூற விரும்பினேன்.  கரவொலி

நாம் பெருமிதம் கொள்ள வேண்டும் நண்பர்களே!!  இப்போது உத்திரபிரதேசத்தின் நபர் தோசை உண்பார் இல்லையா?   சாம்பாரை கூடசுவைத்துச் சாப்பிடுவார்.  அப்போது வடக்கு தெற்கு பார்ப்பதில்லையே!!  தென்னாடு செல்லுங்கள், அங்கே பூரிசப்ஜி, பரோட்டா குருமா கிடைக்கிறது இல்லையா!!  மிகவும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.  எந்த நெருக்கடியோ அழுத்தமோ இல்லை. 

எத்தனை இயல்பாக இவையெல்லாம் அமைந்திருக்கிறதோ, அதே போல மொழியும் இயல்பாக கற்க வேண்டும்.  என்னைப் பொறுத்த வரையில், தாய்மொழியைத் தவிர பாரதத்தின் ஏதோவொரு மொழியின் ஒரு சில வாக்கியங்களாவது பேச வரவேண்டும்.  அப்படிப்பட்ட மொழிக்காரருடன் நீங்கள் அவருடைய மொழியில் பேசினால் அவர் உங்களோடு கலந்து விடுவார். 

மொழியை ஒரு சுமையாக அல்ல, சுகமாகப் பார்க்க வேண்டும்.  நான் சமூக சேவையில் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில், மொழிகளை வெகு சுலபமாகவும் விரைவாகவும் கற்றுக் கொள்ளும் திறன் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.  அஹ்மதாபாதின் ஒரு கூலித் தொழிலாளியின் மகள், பல மொழிகளில் பேசுவாள்.  ஏன்?  ஏனென்றால் அது தொழிலாளிகளின் காலனி, அங்கே பல மொழிகள் பேசுவோர் இருந்தார்கள், பள்ளி குஜராத்தி மொழிப் பள்ளி, பொதுமொழி ஹிந்தி.  யாரிடம் எந்த மொழியில் பேச வேண்டுமோ அவர்களிடம் அந்தந்த மொழியில் பேசுவாள். 

8-9 வயதேயான பெண்.  அதாவது அவளது திறமை முழுமையாக இருந்தது.  ஆகையால், நாம் நமது மரபின் மீது பெருமிதம் இருக்க வேண்டும், இதை 5 உறுதிமொழிகளாக நான் செங்கோட்டையிலிருந்தும் கூறினேன். கரவொலி நமது மொழிகளின் மீது தொன்மையான மொழியின் மீது தமிழின் மீது ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை உண்டாக வேண்டும்.    நன்றி கரவொலி

கட்டக் ஒடிஷாவைச் சேர்ந்த ஆசிரியை சுனைனா திரிபாடியின் வினா. 

சுவாரசியமாக எப்படி மாணவர்களுக்குக் கற்பிப்பது, விழுமியங்களை எப்படி பயிற்ருவது, ஒழுங்குமுறையோடு எவ்வாறு கற்பிப்பது? 

இப்போதெல்லாம் ஆசிரியர்கள் குறித்தசில சிந்தனைகளில் மூழ்கியிருக்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம் கரவொலி பாதி கூறுவதற்கு முன்பு கரவொலியா?  வகுக்கப்பட்ட பாடத்திட்டம் இருக்கிறது, 20,30 நிமிடங்கள், அப்படியே ஒப்பித்து விடுகிறார்கள்.  நான் என் காலத்து ஆசிரியர்கள் பற்றிக் கூறுகிறேன், இன்றைய ஆசிரியர்கள் ஒருவேளை வேறுவிதமாக இருக்கலாம்.  நாங்கள் படிக்கும் காலத்தில், ஆசிரியர் நன்கு தயார் செய்து கொண்டு வந்திருப்பார், எங்கோ ஓரிடத்தில் மறந்து போக நேரலாம், நிலைமையை மானவர்கள் தெரிந்து கொள்ளாமல் எப்படி சமாளிப்பது என்று யோசிக்கும் போது, உடனே ஏய், யாரங்கே எங்கே கவனித்துக் கொண்டிருக்கிறாய் என்று அரட்டுவார், அப்போது யாராவது சிரித்து விட்டால், உடனே அவனை அரட்டுவார், இதற்கிடையில் மறந்த\து ஞாபகம் வந்து விட்டால் வண்டி தண்டவாளத்திற்கு வந்து விடும் கரவொலி   

ஓஹோ இன்றும் அப்ப்டித்தான் நடக்கிறதா? உங்கள் ஆசிரியர்கள் மிகச் சிறப்பானவர்கள்.  இன்றைய ஆசிரியர்கள் செல்பேசியில் பாடத்திட்டத்தை எடுத்துக்கொண்டு வருகிறார்கள்.  அதாவது யாரிடம் பலவீனங்கள், குறைகள் இருக்கிறதோ, அவை வெளியே தெரியாமல் இருக்கவே கோபப்படுகிறார்கள்.  மாணவர்கள் உங்கள் அறிவை உரைத்துப் பார்க்க விரும்பவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.  மாணவன் உங்களிடம் வினா எழுப்பினால் அவன் உங்களைத் தேர்வுக்கு உட்படுத்தவில்லை.  கண்டிப்பாக இல்லை. 

மாணவர்கள் கேள்வியெழுப்பினால் அவர்களிடம் கற்கும் தாகம் இருக்கிறது.  நீங்கள் அவர்களின் ஆவலை ஊக்கப்படுத்துங்கள்.  அவர்களுடைய தாகம் தான்……. இருமல்…….. அவர்களுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய மூலதனம்.   எந்தவொரு ஆர்வத்தையும் அணைக்காதீர்கள், குன்றச் செய்யாதீர்கள்.  நிதானமாகக் காது கொடுத்துக் கேளுங்கள்.  ஒருவேளை உங்களுக்கு விடை தெரியவில்லை என்றால், நல்ல கேள்வி கேட்டாய் தம்பி, உனக்குப் புரியும் வகையில் பதில் சொல்ல வேண்டும் என்றால் நேரமாகும், நீ நாளை என் இருக்கைக்கு வா, உனக்கு விவரமாகப் புரிய வைக்கிறேன் என்று சொல்லுங்கள்.  பிறகு வீடு சென்று ஆசிரியர் விடை காணலாம்.  அடுத்த நாள் மாணவனிடம் உனக்க் எங்கிருந்து இந்தக் கருத்து உண்டானது என்று கேளுங்கள், அவனை பாராட்டுங்கள். 

பிறகு விடையை அவனுக்குச் சொல்லுங்கள்.  அவன் அதை போற்றி ஏற்றுக் கொள்வான்.  மாணவர்கள் தங்கள் ஆசிரியர்கள் கூறுவனவற்றை வேதவாக்காக எடுத்துக் கொள்வார்கள்.  தவறான ஒன்று கூட அவர்கள் மனதில் பதிய விட்டால், அது வாழ்க்கை முழுவதும் அவர்கள் மனதை விட்டு விலகாது.  விடையறிய நேரம் எடுத்துக் கொள்வது தவறில்லை.  அடுத்து ஒழுங்குமுறை பற்றியது.  சில வேளைகளில் வகுப்புகளில் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்த மிகவும் பலவீனமான மானவனிடம், உனக்குப் புரிந்ததா பார்க்கலாம் என்று கேட்பார்கள்.  அவன் வார்த்தைகளுக்குத் தேடுவான், நீங்கள் அவனைத் திட்டுவீர்கள்.  ஒருவேளை நான் டீச்சராக இருந்தால், மிக புத்திசாலியான மாணவனிடம் நீ சொல்லு என்பேன்.  அவன் கூறுவதை ஒரு மாணவன் என்ற வகையிலே பலவீனமான மாணவன் லகுவாகப் புரிந்து கொள்வான்.  நல்ல மாணவனுக்கு அங்கீகாரம் அளிக்கிறேன், என்பது ஒன்று. 

அடுத்து, எந்த மாணவன் ஒழுங்குக் குறைபாட்டோடு இருக்கிறானோ, அவனைத் தனியே அழைத்து, நேற்று எத்தனை அருமையான விஷயம் பற்றிப் பேசினேன், நீ விளையாடிக் கொண்டிருந்தாய், சரி இன்று நீ விளையாட்டைப் பிறகு செய், பாடத்தால் உனக்கு நன்மைகள் ஏற்படுமில்லையா என்று கூறுங்கள்.  உரையாடுங்கள், அவனுக்கும் பங்கிருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்தினால், அவன் வகுப்பில் தவறாக நடக்க மாட்டான்.  ஆனால் அவனுடைய சுயகௌரவத்தைத் தொட்டால், அவன் கோளாறு செய்யத் தொடங்குவான்.  சில வேளைகளில் சமத்காரமாக நடக்கிறார்கள்.  சேட்டை செய்பவனை வகுப்புக் கண்காணிப்பாளனாக ஆக்குதல்.  அப்போது தான் சரியாக நடக்க வேண்டும் என்ற உணர்வு அவனுக்கு உண்டாகும். 

தன்னுடைய சேட்டைகளைச் சரி செய்ய முயல்கிறான், ஆசிரியருக்கு விருப்பமானவனாக மாற முலகிறான்.  கடைசியில் அவன் வாழ்க்கை மாறி, வகுப்பின் சூழலும் மாறி விடுகிறது.  பல வழிமுறைகள் உண்டு, ஆனால் நாம் கம்பெடுத்து ஒழுங்கை நிலைநிறுத்தும் பாதையைக் கைக்கொள்ள வேண்டியதில்லை, பரஸ்பர நெருக்கம் என்ற வழியைக் கையாளலாம், வெற்றி பெறலாம். கரவொலி

தில்லியைச் சேர்ந்த பெற்றோர் – சுமன் மிஷ்ராவின் வினா

ஒரு மாணவன் சமூகத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் ?

நாம் எந்த சமூகம் பற்றிப் பேசுகிறோம்?  நமது சுற்றில் இருக்கும் சமூகமா?  நல்லது கெட்டது பேசும் சமூகமா?  ஃபோனில் மணிக்கணக்காகப் பேசும் சமூகமா?  இதையே நாம் சமூகம் என்று கருதினால், அப்படியென்றால் செருப்பை இங்கே கழட்டு, இங்கே இப்படி நடந்து கொள், அப்படி நடந்து கொள் என்று நீங்கள் கூறலாம்.  ஆனால் யதார்த்தம் என்னவென்றால், மாணவனை ஒரு வீட்டின் எல்லையோடு கட்டிப் போடக் கூடாது.  சமூதாயத்தில் அவனுக்கு எத்தனை பரவலான அனுபவங்கள் ஏற்பட முடியுமோ அத்தனையும் அவனுக்குக் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.  நான் எங்கே கூறினே என்று நினைவில்லை.  என்னவென்றால், 10ஆவது, 12ஆவது தேர்வுக்குப் பிறகு முதலில் குழந்தைகள் அவர்கள் மாநிலத்தில் 4-5 இடங்களுக்குச் சென்று வாருங்கள், அங்கே புகைப்படங்கள், விவரங்கள் எல்லாவற்றையும் எழுதிக் கொண்டு வா என்று அனுப்புங்கள், தைரியமாக.  பிள்ளைகள் நிறைய கற்றுக் கொண்டு வருவார்கள், வாழ்க்கையை அறிந்து கொண்டு வருவார்கள், அவர்களிடம் நம்பிக்கை ஏற்படும். 

12ஆவதுக்குப் பிறகு மாநிலம் விட்டு வேறு மாநிலம் செல்லச் சொல்லுங்கள்.  இத்தனை பணம், ரயில் பயணம், முன்பதிவு கிடையாது, இத்தனை உணவு, இத்தனை பொருள், வந்து அனைவருக்கும் உனது பயணம் பற்றித் தெரிவி என்று சொல்லி அனுப்புங்கள், நீங்கள் உங்கள் பிள்ளைகளை சோதித்துப் பார்க்க வேண்டும்.  சமுதாயத்தின் பல்வேறு மட்டங்களில் ஊடாட உத்வேகம் அளிக்க வேண்டும்.  உனது பள்ளியின் மாணவன் கபடியில் சிறப்பாக விளையாடினான் என்றால் அவன் வீடுவரை சென்று அவனை வாழ்த்திவா என்று அனுப்புங்கள்.  அறிவியல் கண்காட்சியில் நன்கு செயல்பட்டால், அவன் வீடு சென்று வாழ்த்திவா என்று அனுப்புங்கள்.  அவனை விசாலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகளை அவனுக்கு அளியுங்கள். 

இப்படிச் செய், அப்படிச் செய்யாதே, அப்படிச் செய், அப்படிச் செய்யாதே என்று தயவு செய்து அவனைத் தளைப்படுத்தாதீர்கள்.  பட்டாம்பூச்சிகளுக்கு சீருடை அணிவிக்க வேண்டும் என்றால் என்ன ஆகும்?  இதில் ஏதும் பகுத்தறிவு இருக்கிறதா?  பிள்ளைகள் மனம் விசாலப்பட வேண்டும் என்று நாம் எண்ண வேண்டும்.  புதியபுதிய எல்லைகளைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும், அறிமுகப்படுத்த வேண்டும்.  நாங்கள் சிறுவர்களாக இருந்த போது, விடுமுறைக்காலத்தில், தாத்தவிடம் செல்வது, அத்தை வீடு செல்வது, மாமா வீடு செல்வது, இதனால் ஆனந்தம் ஏற்படும், நல்லபழக்கங்கள் ஏற்படும், வாழ்க்கை பற்றிய ஒரு புரிதல் ஏற்படுகிறது.  நாம் நமது வட்டத்திற்குள்ளேயே பிள்ளைகளைச் சிறைப்படுத்த வேண்டாம். 

எந்த அளவுக்கு அவர்களுடைய எல்லைகளை விஸ்தரிக்கிரோமோ அந்த அளவுக்கு சிறப்பானது.  அவர்களுடைய பழக்கவழக்கங்கள் சரியானவையாக இருக்கிறதா, எதையோ தொலைத்தவனாக இருக்கிறானா, சோகமாக இருக்கிறானா, முன்பெல்லாம் உணவு வேளையில் நகைச்சுவையாக இருப்பவன் இப்போது அப்படி இல்லையே என்பதில் கவனம் செலுத்த வேண்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  எப்போது இந்த எச்சரிக்கை உணர்வு பளிச்சிடும் என்றால், இறைவன் அளித்த கொடையாக, இதைப் பாதுகாப்பது நமது பொறுப்பு என்ற உணர்வு ஏற்படும் போது, நல்ல விளைவு ஏற்படும். 

மாறாக, என் பிள்ளை, நான் சொல்வதையே செய்ய வேண்டும்.  என் ஆசை\ப்படியே நீ நடக்க வேண்டும், செய்ய வேண்டும்.  என் வாழ்க்கையில் இப்படி நடந்தது, இப்படியே தான் உன் வாழ்க்கையிலும் நடக்கும் என்று கருதினால், விச்யயம் விபரீதமாகிப் போகும்.  ஆகையான், திறந்த மனத்தோடு, நாம் சமூகத்தின் விசாலத்தன்மை நோக்கி மாணவர்களை இட்டுச் செல்லும் முயற்சியில் ஈடுபடவேண்டும்.  அவர்களுக்கு வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களைக் கொண்டு உத்வேகம் அளிக்க வேண்டும். 

பாம்பையும் கீரியையும் வைத்துத் தொழில் நடத்துவோரைக் கண்டால் அவர்களிடம் உரையாட விடுங்கள், எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தார்கள், இதையெல்லாம் எப்படிக் கற்றார்கள், என்று அறிந்து வா என்று கூறுங்கள்.  அவர்களுடைய புரிந்துணர்வு விழித்துக் கொள்ளும் ஐயா.  ஏன் இப்படி ஒரு தொழிலைப் புரிகிறார்கள்!!  அறிதல், தெரிதல், புரிதல் தொடங்கி விடும்.  என்ன முயல வேண்டும்? 

உங்கள் பிள்ளைகளின் பரவலான கற்றல் அதிகமாக வேண்டும்.  அவர்கள் தளைகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது.  வானமே அவர்களுடைய எல்லையாக இருக்க வேண்டும்.  சந்தர்ப்பங்களை அவர்களுக்கு அளியுங்கள்.  அவர்கள் சமூகத்திலே ஆற்றல்களாக உருவெடுப்பார்கள்.  பலப்பல நன்றிகள். கரவொலி

மாணவர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்பாளர்கள், பெற்றோர் என அனைவரின் தரப்பிலிருந்தும் மாண்புமிகு பிரதமர் அவர்களே உங்களுக்கு எங்களின் மிகமிகப் பணிவான, மனம்கனிந்த பலகோடி நன்றிகள். 

உங்களுக்கும் எனது கனிவான நன்றிகள்.  நமது மானவச் செல்வங்கள், நமது பாதுகாவலர்கள், நமது பெற்றோர், நமது ஆசிரியர்கள், மாணவர்களின் மீது தேர்வுகளின் சுமை அதிகரித்து வருகிறது, ஒரு சூழல் ஏற்பட்டு வருகிறது, இதை நாம் எத்தனை விரைவாக கண்டுணர்ந்து தீர்வு அளிக்கிறோமோ, தேர்வுகளை வாழ்க்கையின் இயல்பான ஒன்றாக, கிரமமாக ஆக்குகிறோமோ, அப்படிச் செய்தோம் என்றால், தேர்வுகளே கொண்டாட்டங்களாக ஆகி விடும்.  ஒவ்வொரு தேர்வும் திருவிழாவின் கோலாகலத்தைப் பெறும், இந்தக் கோலாகலம், சந்தோஷத்தின் உத்திரவாதமாக இருக்கும்.  இந்த சந்தோஷத்தை உங்களுக்குள்ளே நிறைத்துக் கொண்டு பயணியுங்கள்.  உங்கள் அனைவருஇக்கும் என்னுடைய நல்வாழ்த்துகள், பலப்பல நல்வாழ்த்துகள்.

தமிழில் : ராமஸ்வாமி சுதர்ஸன்
ஒலிபரப்பு: சென்னை வானொலி நிலையம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe