குஜராத் மாநிலத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு இதுவரை 237 பேர் பலியானதைத் தொடர்ந்து, மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்காமல் தடுக்கவும், இந்நோய் மேலும் பரவாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆமதாபாத்தில் இந்தத் தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளது. நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகின்றது என்றாலும், குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்நோய் கடும் பாதிப்பை ஏற்டுத்தியுள்ளது. இந்தக் காய்ச்சலால் நாடு முழுவதும் 875 பேர் பலியாகியுள்ளனர். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் குறிப்பாக, குஜராத் மாநிலத்தில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. அம் மாநில அமைச்சர் ஒருவரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் குஜராத் மாநில சட்டப் பேரவைத் தலைவருக்கும் இந்நோய் அறிகுறிகள் கண்டறியப் பட்டுள்ளதாம். குஜராத்த்தில் இந்நோய்க்கு இது வரை 231 பேர் பலியாகியுள்ளனர். ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆமதாபாத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆமதாபாத் மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன்மூலம் பலர் ஒன்றுகூடும் வாய்ப்பு தடுக்கப்பட்டுள்ளது. பல பேர் ஒன்றுகூடும் இடங்களில் இருந்துதான், வாய் மற்றும் மூக்கு வழியாக இந்த நோய் பரவுவதாகக் கூறப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பன்றிக் காய்ச்சலைத் தடுக்க 144 தடையுத்தரவு: குஜராத்தில் நடவடிக்கை
Popular Categories


