
நாடாளுமன்றத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் மீண்டும் உள்ளே வந்தார். அதே நேரம் தொடர் அமளியால் நாடாளுமன்றம் மதியம் 2 மணி வரை ஒட்டி வைக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, ராகுலின் தகுதி நீக்க உத்தரவை இன்று காலை மக்களவைச் செயலகம் திரும்பப் பெற்றது. வயநாடு எம்.பி.-யாக ராகுல் காந்தி தொடர்வார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 136 நாட்களுக்குப் பிறகு ராகுல் மீண்டும் எம்.பி., யாக அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதற்காக, நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
இன்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், முன்னதாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் 12 மணிக்கு அவை தொடங்கியதும், அவையில் பங்கேற்க ராகுல் வந்தார். நாடாளுமன்றம் காந்தி சிலை முன் காங்கிரஸ் எம்.பி.க்கள், ராகுல் காந்தி வாழ்க என முழக்கமிட்டு அவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
அதன்பின் ராகுல் மக்களவையில் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.