சத்தீஸ்கரின் அடுத்த முதல்வராக விஷ்ணு தேவ் ஸாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; இதற்கான அறிவிப்பை பாஜக மேலிடம் வெளியிட்டுள்ளது!
சத்தீஸ்கரில், புதிய முதல்வராக பாஜக.,வைச் சேர்ந்த விஷ்ணு தேவ் ஸாய் தேர்வு செய்யப்பட்டார். இவர் முன்னாள் முதல்வர் ராமன் சிங்குக்கு நெருக்கமானவர்.
சத்தீஸ்கரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு நவ.7 மற்றும் 17ல், இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. இவை எண்ணப்பட்டு, கடந்த டிச.3ம் தேதி முடிவுகள் வெளியாகின. இதில் ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ் 35 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வி அடைந்தது. பெரும்பான்மையைக் கடந்து 54 தொகுதிகளை வென்ற பாஜக., சத்தீஸ்கரில் ஆட்சி அமைக்க உள்ளது.
சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் சட்டசபைக்கு புதிதாக தேர்வாகியுள்ள பாஜக., – எம்எல்ஏ.,க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், மத்திய மேற்பார்வையாளர்களான மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, சர்பானந்த சோனவால், பாஜக., பொதுச்செயலர் துஷ்யந்த் குமார் கௌதம் ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் பாஜக., எம்எல்ஏ.,க்களிடம் தனித்தனியாகவும், கூட்டமாகவும் கேட்டறிந்தனர்.
இந்தக் கூட்டத்தில் புதிய முதல்வராக விஷ்ணு தேவ் ஸாய் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மாநிலத்தில் இரண்டு துணை முதல்வர்களை நியமிக்க முடிவு செய்யப் பட்டது.
சத்தீஸ்கரில் புதிய முதல்வராகப் பொறுப்பேற்கும் விஷ்ணு தேவ் ஸாய் நடந்து முடிந்த தேர்தலில் குங்குரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் கடந்த ஆண்டு சத்தீஸ்கர் மாநில பாஜக., தலைவராக பதவி வகித்தார். பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்.
எஃகு, சுரங்கம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சராக பதவி வகித்தவர்.
கடந்த 1999, 2004, 2009, 2014 ஆகிய ஆண்டுகளில் ராய்கர் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 4 முறை எம்பி.,யாக தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த 1990 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள தப்காரா தொகுதியில் இருந்து தொடர்ந்து இரண்டு சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டார்.