பேடிஎம் நிறுவனர் விஜர் சேகர் வர்மா ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிட்சிலாவை வாங்கியுள்ளார் என்றும், பேடிஎம் என்ற பெயரை பை பிளாட்ஃபார்ம்ஸ் – Pai Platforms என மாற்றுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு வாரமாகவே பேடிஎம் மீதான சர்ச்சை தொடர்ந்து இருந்து வருகிறது. பேடிஎம் சேவை பிப்ரவரி 29 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என்று தகவல் வெளியாகி, பேடிஎம் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிஅளித்தது. பேடிஎம்மை பயன்படுத்தலாமா? வேண்டாமா?
என்ற குழப்பத்தில் பலர் இருந்து வருகின்றனர்.
வங்கிகள் ஒழுங்குமுறை சட்டம் 1949ன் கீழ் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க தடை விதித்தும், அந்நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்குவதாகவும், அதன் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தணிக்கையாளர்கள் குழுவை நியமித்தும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக, தற்போது விதிகளுக்கு உட்படாதது, நிதிநிலை அறிக்கையில் பிரச்னை உள்ளிட்ட காரணங்களுக்காக அந்த நிறுவனத்தையே ஒட்டுமொத்தமாக ரிசர்வ் வங்கி முடக்கியதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஜே.சுவாமிநாதன் இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது, Paytm Payment Bank Limited (PPBL) மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே தவிர, பேடிஎம் மீது அல்ல என்று அவர் கூறியுள்ளார். அத்தகைய சூழ்நிலையில், இது பேடிஎம் செயலியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து, ONDC இன் விற்பனையாளர் தளமான Bitsila நிறுவனத்தை பேடிஎம் நிறுவனம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனால், அதன் பெயரை மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகீறது. அதன்படி, பேடிஎம் என்ற பெயரை பை பிளாட்ஃபார்ம்ஸ் என மாற்றியுள்ளதாகக் கூறப்படுகிறது.