ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் 3 நாள் விசாரணைக்காவல் முடிந்து 4வது முறையாக இன்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சி.பி.ஐ அதிகாரிகள் மீண்டும் ஒருமுறை காவல் நீட்டிப்பு கேட்டு மனு தாக்கல் செய்தனர்.
ஆனால் இதற்கு கார்த்தி சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார். சி.பி.ஐ அதிகாரிகள் ஒவ்வொரு கேள்விக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும், குறித்த நேரத்திற்கு விசாரணையை முடிக்காதது அவர்கள் தவறே என்று வாதிட்டார். இந்த நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கார்த்தி சிதம்பரத்தின் காவலை மேலும் 3 நாட்கள் நீட்டித்து அதாவது மார்ச் 12-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
இந்த முறையை சேர்த்து கார்த்தி சிதம்பரத்தின் விசாரணைக்காவல் 4வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.