/pm-modi-to-hold-chief-ministers-meet-for-gandhi-anniversary
புது தில்லி: தில்லியில் இன்று அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதற்காக அனைத்து மாநில முதல்வர்களும் தில்லி சென்றுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையேற்று, இந்த மாநாட்டைத் தொடங்கி வைக்கிறார். 2019ஆம் ஆண்டு மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கு முன் இந்தியா முழுவதும், அதிக அளவிலான மக்கள் நலத் திட்டங்களை உடனடியாக மேற்கொள்ள மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த நலத் திட்டங்கள் குறித்து விவாதிக்க முதல்வர்கள் மாநாடு நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இன்று ஒரு நாள் முழுவதும் இந்த மாநாடு நடைபெறும்.
மாநில வளம், மின்சாரம், வறுமை, கல்வி, தூய்மை இந்தியா திட்டம் , விவசாய பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.
இந்த மாநாட்டின் போது, காவிரி பிரச்னை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது கருத்துகளை எடுத்து வைப்பார் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் பிரதமர் மோடியுடன் காவிரி விவகாரம் குறித்து விவாதிப்பார் என்று தெரிகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் உள்ளிட்டோர் தில்லி வந்துள்ளனர். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநில முதல்வர்களும் வருகின்றனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டில் ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று திடீரென செய்தி பரவியது. மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.

