அடுத்த 2 நாட்களுக்கு 13 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டில்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மழை மற்றும் புழுதிப்புயல் பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்றும், நாளையும் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு – தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த வாரத்தில் தாக்கிய இடி மின்னல், மழை மற்றும் சூறாவளி புழுதிப் புயலால் 124 பேர் உயிரிழந்தனர். 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இந்த இயற்கைச் சீற்றத்தில் ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன .தொலைத் தொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்டன. ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டதால் கிராமங்கள் இருளில் மூழ்கின.
இத்தகைய சூறாவளிப் புயல் மீண்டும் தாக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
உத்தரகாண்ட், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கடுமையான வேகத்துடன் காற்று வீசும் என்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். வடகிழக்கு மாநிலங்களில் இன்று பலத்த புழுதிப் புயல் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புயல் மழை காரணமாக ஹரியானா அரசு பள்ளிகளுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் வானிலை ஆய்வுத்துறையின் முன்னறிவிப்பைத் தொடர்ந்து 13 மாநிலங்களும் விழிப்புடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.