பெங்களூருவைச் சேர்ந்த 26 வயது பெண் ஆர்கிடெக்ட் கடந்த 1ம் தேதி கோடிஹல்லியில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையம் செல்ல ஓலா கார் புக் செய்தார். அதிகாலை 2 மணிக்கு அவர் மும்பைக்கு விமானத்தில் செல்ல திட்டமிட்டிருந்தார்.
காரை அருண் என்பவர் ஓட்டினார். டோல்கேட் அருகே சென்றபோது கார் வேறு பாதையில் செல்வதைக் கண்டு அந்தப் பெண் கேட்டுள்ளார். டோல் கட்டணத்தை தவிர்க்க குறுக்கு வழியில் செல்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் ஒதுக்குபுறமான இடத்தில் காரை நிறுத்தி அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். ஓலா செயலியில் உள்ள அவசர அழைப்பை அமுக்குவதற்குள் அருண் செல்போனை பறித்துக் கொண்டுள்ளார்.
தனது இச்சைக்கு இணங்க மறுத்தால் எனது நண்பர்களை அழைத்து கும்பலாக பாலியல் பலாத்காரம் செய்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளார். இதனால் அருண் மிரட்டலுக்கு பயந்து அவர் கூறியபடி ஆடைகளை அந்த பெண் அவிழ்த்துள்ளார். அவரை பலாத்காரம் செய்த அருண், அந்தப் பெண்ணின் செல்போனிலேயே ஆபாச புகைப்படம் எடுத்து தனது செல்போனுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பிக் கொண்டார்.
இது குறித்து யாரிடமும் சொல்ல மாட்டேன் என்றும் தன்னை விட்டுவிடும்படி அந்தப் பெண் கதறியவுடன் விமான நிலையத்தில் இறக்கிவிட்டுள்ளார். விமான நிலையத்தினுள் அவர் சென்றவுடன் 2 முறை அருண் போனில் தொடர்பு கொண்டுள்ளார். அதன் பின்னர் அருண் நம்பரை அந்த பெண் பிளாக் செய்துவிட்டார்.
விமானத்தில் மும்பை சென்ற அந்த பெண் இ.மெயில் மூலம் ஓலா கார் குறித்த அனைத்து விபரங்களுடன் பெங்களூரு போலீஸ் கமிஷனருக்கு புகார் அனுப்பினார். போலீசார் விரைந்து செயல்பட்டு அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த டிரைவரை கறுப்பு பட்டியலில் சேர்த்துவிட்டதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.


