காவிரி… கடவுள் அருள்… கர்நாடகம்.. குமாரசாமி… மழை பெய்து நீர் வரும்… இப்படி எல்லாம் தமிழக மக்கள் தூக்கத்தில் கூட உளறிக் கொட்ட வேண்டிய நிலைக்கு ஆளாக்கப் பட்டிருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் காரணம், திமுக.,உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்திய அரசியல் நாடகங்களும், இப்போது கைபொத்தி வாய்மூடிக் கிடக்கும் போக்கும் தான்!
கர்நாடகத்தில் தேர்தல் நேரத்தில் மத்திய அரசுக்குக் கொடுத்த நெருக்குதலும் போராட்டங்களும், ஐபிஎல் போட்டிகளை நடத்தக் கூடாது என்று சென்னையை வன்முறைக் களமாக்கிய கயமைத்தனங்களும் தமிழகம் அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. அப்படி மறந்துவிட்டால் அவர்கள் தமிழர்களே அல்லர்.
தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும் எதிராகப் பேசியே கர்நாடகாவில் காவிரி பாயும் மாண்டியா பகுதியில் ஓட்டுகளை அள்ளி முதல்வரும் ஆகிவிட்ட குமாரசாமி, இதே தமிழ் மண்ணில் வந்து, கோயில்களை சுற்றி வருகிறார். அவருக்கு முதல் மரியாதை கொடுத்து தமிழர்கள் தங்கள் நன்றிக் கடனை தீர்த்துக் கொள்கிறார்கள்.
வெற்றி பெற்றதும் திருவரங்கம் வந்தவர், நேற்று மதுரைக்கு வந்தார். மீனாட்சி அம்மனை தரிசித்தார். அத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை… திருவரங்கத்தில் என்ன சொன்னாரோ அதையே மதுரையிலும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். “கடவுளின் அருளால் நல்ல மழை பெய்கிறது; நீர் பங்கீட்டு பிரச்சனைக்கு வாய்ப்பில்லை!” இதுதான் குமாரசாமி உதிர்த்த வாசகங்கள். அதற்காக புளகாங்கிதமடைந்து குமாரசாமிக்கு ஜே போட்டுக் கொண்டிருக்கிறார், தமிழகத்தின் கேஜ்ரிவால் என்று பெயர் பெற்றிருக்கும் கமல்ஹாசன்.
குமாரசாமி, மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் முன்னதாக விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடவுளின் அருளால் நல்ல மழை பெய்து, காவிரி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் இரண்டு மாநிலங்களுக்கும் நீரைப் பங்கிடுவதில் பிரச்னை இருக்காது. எனவே தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்து விடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை என்றார்.
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குடகு மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை நீடித்து வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அதேபோல், காவிரியின் கிளை ஆறான லட்சுமண தீர்த்தம் மற்றும் சில நீர்ப்பிடிப்பு பகுதிகள், நீர்வீழ்ச்சிகள் என குடகு மாநிலமே கன மழையால் குளிர்ச்சி அடைந்துள்ளது.
வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி காவிரி நதி நீர் தமிழகத்துக்கு திறந்து விடப்படும். இதை உத்தேசித்துத்தானே தமிழகத்தில் அத்தனை போராட்டங்களும் நடந்தன. மத்திய அரசு, நான்கு மாநிலங்களையும் கலந்து ஆலோசித்து சிக்கல் இன்றி ஆணையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று சொன்னபோது, சிக்கல்களை நாங்கள் உருவாக்குவோம் என்று முன்னணியில் நின்றது கர்நாடகம். இன்றளவும், மத்திய அரசு உச்ச நீதிமன்ற வழிகாட்டலில் அமைத்துள்ள காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு, கர்நாடகம் தனது தரப்பில் இருந்து உறுப்பினர்களை நியமிக்கவில்லை. காலம் கடத்துகிறது, அல்லது ஆணையத்தை அது விரும்பவில்லை.
ஆனால், கர்நாடக தேர்தல்கள் முடியும் நேரத்தில் உடனடியாக ஆணையத்துக்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறோம் என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் கொடுத்த உறுதிமொழிகளை தமிழகத்தின் அரசியல் கட்சிகள் மிகப் பெரிதாக ஓலமெடுத்து பொங்கித் தீர்த்தார்கள். ஆனால் இப்போதோ, மத்திய அரசு ஆணையத்தை அமைத்து விட்டது. தமிழகத்தின் கோரிக்கை நிறைவேற்றப் பட்டுள்ளது. இருப்பினும் கர்நாடகம் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. ஜூன் 12ம் தேதி கடக்கும்போது, மறு நாளே தமிழகத்தில் திமுக., உள்ளிட்ட தமிழர் கட்சிகள் போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அதன் மூலம், இவர்களுக்கு அக்கறை காவிரி நீர் என்பதை விட, தங்கள் அரசியலே முதன்மைக் குறி என்பது தெளிவாக தமிழக மக்கள் முன் வைக்கப்பட்டிருக்கிறது.
காவிரி ஆணையத்திற்கான கர்நாடக உறுப்பினர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தால் காவிரி நீர் திறப்பு, ஆணையத்தின் கண்காணிப்பின்படி அமையாமல் உள்ளது.
இந்நிலையில் நேற்று கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நிரம்பி வரும் நிலையில், கர்நாடகம் அணையில் நீரைத் தேக்கி வைக்க வழியின்றி, வழக்கம் போல் மழைக்காலங்களில் செய்வதை நேற்று செய்துள்ளது.
கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மடிகேரி, குடகு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக கர்நாடகத்தின் கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 37 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான 84 அடியில் நீர்மட்டம் 80 அடியை தாண்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி நீர்திறப்பும் அதிகரிக்கப்பட்டது.
வியாழன் அன்று விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று காலை முதல் விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுவிற்கு இன்று இரவுக்குள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், திடீரென நேற்று காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்த நிலையில், அணைக்கு வரும் நீரின் வரத்தும் குறைந்து போனது. இதனால், திடீரென இன்று காலை கபினி அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் குறைக்கப் பட்டது.
இப்போது இந்த நீரின் அளவைக் கணக்கிட்டு, முறையாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்தப் போவது யார்? இத்தனை ஆண்டுகாலமாக இதே செயலைத்தானே கர்நாடகம் செய்து வந்தது. இப்போது ஆணையத்துக்கு உறுப்பினரை நியமிக்காமல், முறையான கணக்கு வழக்கு மேற்கொள்ளாமல், கள்ளக்கணக்கு காட்டி கனமழை நீரை கபினியில் இருந்து திறந்துவிட்டு, கர்நாடகம் மேற்கொள்ளும் அரசியலை தமிழக கட்சிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை!






