ஹைதராபாத்: சர்ச்சுகள் கட்டுவதற்கு அரசு இடம் தருவது, பாதிரியார்களுக்கு சம்பளம் தருவது உள்ளிட்ட 10 தேர்தல் வாக்குறுதிகளை தெலங்கானா காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது மாநிலத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா சட்டப் பேரவைக்கு தேர்தல் வருகிறது. இங்கே கிறிஸ்துவ மைனாரிட்டி ஓட்டுகளை அப்படியே அள்ளுவதற்கு காங்கிரஸ் கண் வைத்துள்ளது. இதற்காக மற்ற கட்சிகளைப் போல கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது காங்கிரஸ்!
கிறிஸ்துவ தேர்தல் வாக்குறுதி என்று அழைக்கப்படும் இந்த வாக்குறுதிகளை தெலங்கானா காங்கிரஸ் கமிட்டியின் சிறுபான்மைப் பிரிவு வெளியிட்டுள்ளது. அதன் செயலர் ஷீபா ராஜேந்தர் என்பவர் பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள்…
1. பிஷப்புகளுக்கும் பாதிரியார்களுக்கும் பாதுகாப்பு வழங்கப் படும்
2. பாதிரியார்களுக்கு அரசு சம்பளம் வழங்கப்படும்.
3. கிறிஸ்துவ மைனாரிட்டி நிதிக் கழகத்திற்கு அரசு நிதி தரப்படும்.
4. மாநில தலைநகரில் கிறிஸ்துவ பவனும், மாவட்ட தலைநகர்களில் கிறிஸ்துவ சமுதாயக் கூடங்களும் கட்டப்படும்.
5. ஒவ்வொரு ஒன்றியத்திலும் சர்ச் கட்டுவதற்கு அரசு இடம் தரப்படும்.
6. தலித் கிறிஸ்துவர்களுக்கு தாழ்த்தப்பட்டோர் அந்தஸ்து தருவதற்கு மத்திய அரசின் அரசாணை வெளியிடப்படும்.
7. கிறிஸ்துவ கல்லறைகளுக்கு அரசு இடங்கள் ஒதுக்கப்படும்.
8. கிறிஸ்துவர்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளுக்கு அரசு மானியம் வழங்கப்படும்.
9. லோக்சபா, ராஜ்யசபா, சட்டசபைகளில் கிறிஸ்துவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கொண்டு வரப்படும்.
10. கிறிஸ்துவ பத்திரிகையாளர்களுக்கு வீடு, மருத்துவ வசதி, குழந்தைகளுக்கு கல்விக் கட்டணம் வழங்கப்படும்.
இந்த அறிவிப்புக்கு எதிராக தெலங்கானாவில் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பாஜக., தெரிவித்துள்ள கண்டனத்தில், ”மலிவான கவர்ச்சித் திட்டங்களை அறிவித்துள்ளதன் மூலம், காங்கிரஸ் தேர்தல் விதிமுறைகளை மீறியிருப்பதாகக் கூறியுள்ளது.
ஆனால் இவ்வளவு எதிர்ப்பு கிளம்பியும், காங்கிரஸ் மேலிடமோ, ”தேர்தல் வாக்குறுதி தந்துள்ள ஷீபா கட்சியின் சாதாரண தலைவர். அவர் பயன்படுத்திய வார்த்தைகள் தவறாக இருக்கலாம். ஆனால் அதன் நோக்கம் சரியானது” என்று கூறி மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஏற்கெனவே, நாடு முழுதும் கிறிஸ்துவ சபைகள் சர்ச்சுகள் ஒன்று கூடி மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், கிறிஸ்துவர்கள் காங்கிரஸுக்கு ஆதரவாக தேர்தலில் களம் இறங்க வேண்டும் என்றும் பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு வெளிப்படையாக அறிவிப்பு வெளியிட்டும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வெளியிட்டும் தேர்தல் வேலை பார்த்து வருகின்றன. இந்நிலையில் இது போன்ற அரைவேக்காட்டுத் தனமான அறிவிப்புகள், நாட்டில் இந்து, கிறிஸ்துவ மத மோதல்களையும் மதப் பிரிவினையையும் அதிகம் தோற்றுவிக்கும் விதமாக அமைந்திருப்பது கண்கூடு!