புது தில்லி : பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற பாகிஸ்தானிடம் உதவி கேட்கிறது காங்கிரஸ் என்று மத்திய ராணுவத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டி உள்ளார்.
தில்லியில் நடைபெற்ற பாஜக., தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையிலான அரசை வெளியேற்ற காங்கிரஸ் தலைவர்கள் கீழ்த்தரமான அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதற்காக, பாகிஸ்தானிடம் உதவி கேட்டுள்ளனர்.
உலக அளவில் பயங்கரவாதத்தைப் பரப்பும் பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ மோடியை வீழ்த்த பாகிஸ்தானிடம் உதவி கேட்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் ஊழல் இல்லா ஆட்சியை மத்திய பாஜக., அரசு தந்துள்ளது. அத்துடன் மோடி ஆட்சிக் காலத்தில் நாட்டில் பெரிய அளவில் பயங்கரவாதத் தாக்குதல் எதுவும் நடக்கவில்லை. மக்களின் நலனுக்காகவும், நாட்டில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்கும் முக்கியத்துவம் அளித்து அரசு பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.
நம் நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டதை அடுத்து தாக்குதல் நடத்த மற்றும் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் அத்தனை முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு புரிந்துள்ள சாதனைகளை நாட்டு மக்களிடம் பாஜக.,வினர் கொண்டு சேர்க்க வேண்டும் என்றார் நிர்மலா சீதாராமன்.