இந்திய பாதுகாப்புத் துறையின் மிக முக்கிய ஒப்பந்தமாகக் கருதப் படும் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசை கடுமையாகவும் விடாப்பிடியாகவும் விமர்சித்து வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி!
இந்நிலையில், பதிலுக்கு பதிலாக ராகுல் நாட்டு மக்களிடம் ரபேல் குறித்து 10 பொய்கள் கூறியுள்ளதாகவும், அதற்காக, அவருக்கு பொய்களுக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும், என்றும் பாஜக பரிந்துரை செய்துள்ளது
ரபேல் தொடர்பாக ராகுல் 10 பொய்கள் கூறியுள்ளதாகவும், அந்தப் பொய்கள் என்ன என்பது குறித்தும் பாஜக., தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது..
அந்தப் பத்துப் பொய்கள்!
- ரபேல் உதிரி பாகங்களுக்காக ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்ய வேண்டும் என டஸால்ட் நிறுவனத்தை மத்திய அரசுதான் வலியுறுத்தியது என்று கூறியது;
- ரபேல் ஒப்பந்தத்தில் உச்ச நீதிமன்றம் பல்வேறு முறைகேடுகளை கண்டுபிடித்ததாக கூறியது;
- ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் குறுக்கிட்டதை விமர்சித்த பாதுகாப்புத்துறை அதிகாரியை தண்டித்ததாகக் கூறியது;
- முன்னாள் பிரான்ஸ் அதிபர் ஹாலாண்டே, பிரதமர் மோடியை ‘திருடன்’ என விமர்சித்ததாகக் கூறியது;
- ரபேல் குறித்த தகவலைகளை வெளியிட ரகசிய காப்புரிமை ஒப்பந்தங்கள் எதுவும் இல்லை என்று பிரான்ஸ் அதிபர் மேக்ரான் சொன்னதாகக் கூறியது;
- ரபேல் ஒப்பந்தத்தில் ரூ.520 கோடிக்கு போர் விமானம் பெறுவதாகக் கூறி, கர்நாடகாவில் 526 கோடி, ராஜஸ்தானில் 540 கோடி, டெல்லியில் 700 கோடி என மாற்றி மாற்றி மேடைகளில் பேசியது…
- ரபேல் தொடர்பாக ராணுவ விதிமுறைகளையும், நடைமுறைகளையும் மீறி மத்திய அரசு செயல்பட்டதாகக் கூறியது;
- ரூ.526 கோடிக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் போட்டதாகவும், பாஜக., ரூ.1600 கோடிக்கு அதை உயர்த்தியதாகவும் கூறியது;
- ரபேல் ஒப்பந்தத்தால் இந்திய விமானப்படைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறியது;
- தனது கூட்டு சதிகாரர்களான ‘தி இந்து’ செய்தி நிறுவனம், வெளியிட்ட எடிட் செய்யப்பட்ட பாதுகாப்புத்துறையின் ஆவணத்தைக் காட்டி அதை வைத்து அரசியல் செய்யக் கூவிக் கொண்டிருப்பது…
இப்படி பத்து பொய்களை ராகுல் கூறியிருக்கிறார் என்று பாஜக.,வின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப் பட்டுள்ளது.