தங்கள் அலுவலகங்களில் பெண் ஊழியர்களே வேண்டாம் என நீதிபதிகள் கோரிக்கை விடுத்ததாக வந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைமை நீதிபதி மீது பெண் பணியாளர் ஒருவர் தெரிவித்த பாலியல் புகாரை அடுத்து, அலுவலகங்களில் ஆண்களை பணியமர்த்துமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது பெண் பணியாளர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இது அடிப்படை ஆதாரமற்ற பொய் எனக் கூறிய ரஞ்சன் கோகோய், நீதித்துறைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
மேலும், தலைமை நீதிபதி மீதான பாலியல் புகாரை அடுத்து தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களை மாற்ற வேண்டும் என்று நீதிபதிகள் சிலர் தலைமை நீதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை நீதிபதிகள் சிலர் சந்தித்து 20 நிமிடங்கள் பேசியுள்ளனர். ஆனால், உச்ச நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர்களில் 60 சதவீதம் பேர் பெண்கள் என்பதால் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது கடினம் என ரஞ்சன் கோகோய் கூறியுள்ளார்.
அதாவது, ஆண், பெண் பாலின சமத்துவம் பற்றி தீர்ப்புகளைக் கூறும் நீதிபதி, பெண்கள் அதிகம் என்பதால் சாத்தியம் இல்லை என்றும், பெண்கள் குறைந்த அளவில் இருந்தால், இந்தக் கோரிக்கை சாத்தியம் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு எந்தக் காரணத்துக்காக பருவப் பெண்கள் செல்லக் கூடாது என்று தடை விதித்திருக்கிறார்களோ அதை கேலி செய்து, ஆண் பெண் பாலின சமத்துவம் பேசிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு ஐயப்பனே இப்படி ஒரு சோதனையை வைத்திருப்பதாக பக்தர்கள் சிலர் கூறுகின்றனர்.
இப்போது நீதிபதிகளைப் பார்த்து ஐயப்ப பக்தர்கள் கைகொட்டிச் சிரிக்கிறார்கள் என்று சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப் படுகின்றன.



