புது தில்லி: 7 மாநிலங்களில் இன்று நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலின் 6ம் கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 7 தொகுதிகள் கொண்ட தில்லியில் இன்று நடைபெறும் வாக்குப் பதிவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் தலைவர் ராகுல், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்ட விஐபி.,க்கள் பெரும்பாலானோர் வாக்களித்தனர்.
தில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களித்தனர்.
President Kovind voted this morning at the polling station in the Dr Rajendra Prasad Sarvodaya Vidyalaya, within the Rashtrapati Bhavan complex pic.twitter.com/Rn6xj38ovE
— President of India (@rashtrapatibhvn) May 12, 2019
குடியரசுத் தலைவர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற நடைமுறையில் இருந்து முன்னர் கே.ஆர்.நாராயணன் மாறினார். பின்னர் வந்த அப்துல் கலாம், வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்று சொல்லி, தாமும் வாக்களித்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார். ஆனால் பின்னர் வந்த பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர்கள் வாக்களிப்பதில்லை என்ற நடமுறையையே பின்பற்றுவதாகக் கூறி, வாக்களிக்கவில்லை.
இந்நிலையில், அப்துல்கலாம் வழியில் தாமும் வாக்களித்துள்ளார் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
தில்லி துக்ளக்ரோட்டில் உள்ள அவுரங்கசீப் லேன் வாக்குச்சாவடியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் வக்களித்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், மோடி வெறுப்பை காட்டி பிரசாரம் செய்தார். நாங்கள் அன்பை காட்டி பிரசாரம் செய்தோம். அன்பு வெல்லும் என்றார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், தில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித், அஜய் மாக்கான், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத், ஜோதிராதித்யா சிந்தியா, பாஜக., பொதுச் செயலர் ராம் மாதவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வாக்களித்தனர்.