அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இள ரத்தம் பாய்ச்ச, 90 வயது அனுபவமுள்ள தலைவர் தயாராகிவிட்டார்.
அகில காங்கிரஸ் கட்சியின் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு ராகுல் பொறுப்பேற்றார். இதனால் காங்கிரசுக்கு இளம் ரத்தம், இளம் தலைமை என அக்கட்சியினர் கொண்டாடினர். அதற்கு முன்னரே ராகுல் பிரசாரம் செய்த மாநிலங்களில் எல்லாம் காங்கிரஸ் தொடர்ந்து தோல்வியையே சந்தித்தது. குறிப்பாக, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் ராகுலின் பேச்சு எடுபடவில்லை. இதனால் பாஜக.,வின் பிரசார பீரங்கி ராகுல் காந்தி என்று விமர்சித்தனர் பலரும்!
இந்நிலையில் ராகுல் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பிறகு நிலைமை தலைகீழாக மாறிப்போனது. வெற்றிமேல், வெற்றி என நினைத்து வந்த தொண்டா்களுக்கு தோல்விமேல் தோல்விதான் கிடைத்து வந்தது. இதனால் தொண்டர்கள் மட்டுமல்லாது, கட்சியின் மூத்த தலைவர்களும் துவண்டுதான் போனார்கள்.
இந்நிலையில், தனது தலைமைப் பதவியை ராஜினாமா செய்வதாகவும், தற்போது கட்சியில் வேறு மாறுதல்கள் தேவை என்றும் ராகுல் கூறி வருகிறார். இதை அடுத்து, மோதிலால் வோரா கட்சியின் தலைவராக நியமிக்கப் படவுள்ளதாக செய்திகள் வெளியாயின. ஆனால் அவர் இடைக்கால தலைவராக இருப்பார் என்றும், வேறு தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை, காங்கிரஸின் தலைவராக அவர் இருப்பார் என்றும் கூறப் படுகிறது. இதை அடுத்து, இள ரத்தம் வற்றிப்போய் 90 வயது கிழ ரத்தம் பாய தயாராகிறது என கேலி செய்கின்றனர் காங்கிரஸின் இளையவர்கள்!
மோதிலால் வோரா காங்கிரஸ் கட்சியில் பொருளாளராக இருந்தவா். பின்னர் வயது முதிர்வு காரணமாக பொருளாளா் பதவியை அகமத் படேலிடம் கொடுத்து விட்டு ஓய்வு பெறும் நிலையில் இருந்தார். இவர் காங்கிரஸின் மிக மூத்த தலைவராகத் திகழ்கிறார். மத்திய பிரதேச முதலைமச்சராக இரண்டு முறை பதவி வகித்துள்ளார். உத்திரப் பிரதேச ஆளநர், மத்திய அமைச்சர் என பல பதவிகளை வகித்துள்ளார். தற்போது மாநிலங்களவை எம்.பியாக உள்ளார்.
இந்நிலையில் மோதிலால் வோரா இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு அவரையே புதிய தலைவராக தேர்ந்தெடுக்க வைக்கலாம் என காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
முன்னதாக, எப்போது தாம் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டோமோ அப்போது முதலே தாம் தலைவராக இல்லை என்றும், புதிய தலைவரை விரைவாக தேர்வு செய்யுங்கள் என்றும் கூறினார் ராகுல். தாம் ராஜனாமா கடிதத்தை வழங்கிவிட்டதால் தாம் தலைவா் பொறுப்பில் நீண்ட நாட்களுக்கு நீடிக்க முடியாது என்றார்.
புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையில் தாம் பங்கேற்கப் போவதில்லை என்றும், காங்கிரஸ் செயற்குழு இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தியிருந்தார். இந்த நிலையில், மோதிலால் வோராவின் பெயரை காங்கிரஸ் காரியக் கமிட்டி தீர்மானித்திருக்கிறது.