
தேச விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெறும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிவினைவாதிகள், தேசவிரோதிகள், பயங்கரவாதிகள், தேசவிரோத செயல்களுக்கு உடந்தையாக இருப்பவர்கள், பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்பவர்கள், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள் உள்ளிட்டோர் மீது தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த முறையே இதனை காங்கிரஸ் கடுமையாக எதிர்த்தது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு, தங்கள் கட்சி வெற்றி பெற்றால் தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வோம் என்பதை தேர்தல் வாக்குறுதியாகவே காங்கிரஸ் கூறியது. பாஜக தலைமையிலான மத்திய அரசு அச்சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் இந்த வாக்குறுதியை பாஜக தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வந்தது.
இந்நிலையில், இது தொடர்பாக தெலங்கானா ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த எம்.பி. பந்த பிரகாஷ் மக்களவையில் புதன்கிழமை கேள்வி எழுப்பினார்.
அப்போது தேசவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் என்பது காலனி ஆதிக்க காலகட்டத்தில் அடக்குமுறைக்காகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது நாடு சுதந்திரம் பெற்றுவிட்ட நிலையில் அதே சட்டத்தைத் தொடர வேண்டியது அவசியமா? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய், தேச விரோத செயல்களை இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தடுக்க வழி வகை செய்யும் தேச விரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தை நீக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை. தேச விரோத செயல்பாடுகளைத் தடுக்கவும், பயங்கரவாதிகளை ஒடுக்கவும் இந்தச் சட்டம் அவசியமாக தேவைப்படுகிறது என்று கூறினார்.


