
காங்கிரஸ் தலைவராக ராகுல் அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொண்டார். ஆனால் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாமல், கடந்த முறையைப் போலவே படுதோல்வியை சந்தித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராகுல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தை கூட்டி கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார். ஆனால் அதனை உடனடியாக காங்கிரஸ் செயற்குழு ஏற்க மறுத்தது.
இந்நிலையில் நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் இனி நான் காங்கிரஸ் தலைவர் இல்லை. புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய பொறுப்பு கட்சிக்குத் தான் உள்ளது; என் முடிவில் மாற்றமில்லை! விரைவில் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுங்கள் என்றார்.
இதை அடுத்து 90 வயது கடந்த மோதிலால் வோராவை தற்காலிகத் தலைவராக காங்கிரஸ் அறிவித்தது. இது பலராலும் விமர்சிக்கப் பட்டு வந்தது. மீண்டும் ராகுல் ஒரு அனுதாப அலையுடன் உள்ளே வருவார். அதற்குத்தான் இவ்வளவு வயதான நபரை தலைவராக்கிவிட்டு, அடுத்த தேர்தல் வரும் வரை தாம் வேறு பணிகளில் ஈடுபடலாம் என்று ராகுல் கழன்று கொள்கிறார் என்று விமர்சித்தார்கள். மேலும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் இல்லாத நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து கொண்டு ராகுல் பெரிதாக எதையும் பெறப் போவதில்லை என்கின்றனர்.
பாஜக., செய்தித் தொடர்பாளர் நளின் கோஹ்லி இது குறித்துக் கூறிய போது, காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பக் கட்சி. ஆனால் பாஜக., ஒரு ஜனநாயகக் கட்சி. சாதாரண அளவில் இருக்கும் ஒருவர் நாட்டின் உயர்ந்த நிலைக்குவர இயலும். அதற்கு நாட்டின் பிரதமர் மோடி ஓர் உதாரணம்… என்றார்.
காங்கிரஸ் காட்சி, நேரு காந்தி குடும்பத்தால் நிர்வகிக்கப் படுகிறது. அந்தக் கட்சியின் தலைவர் எப்போதும் இந்தக் குடும்பத்தில் இருந்தே வருவார்கள். அல்லது தங்கள் அடிவருடிகளை அவர்களே தேர்வு செய்வார்கள்… என்றார்.
முக்கியமாக, இந்தத் தேர்தலில் காங்கிரஸின் குடும்பத் தொகுதியாகக் கருதப் படும் அமேதி தொகுதியில், காங்கிரஸ் தலைவராக இருந்து போடியிட்ட ராகுலைத் தோற்கடித்தார் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. இதை அடுத்து ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார்.
இந்நிலையில், ராகுல் கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த முடிவு குறித்து கருத்து தெரிவிக்குமாறு ஊடகத்தினர் கேட்டபோது… “ஜெய் ஸ்ரீராம்” என்ற ஒற்றை வார்த்தையை உதிர்த்து விட்டு சிரித்துக் கொண்டே சென்றுவிட்டார்.


