25 வயதிலேயே அரசியலில் பல்வேறு சாதனைகளை படைத்த பாஜகவின் மூத்த பெண் தலைவர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக தமது 67 ஆவது வயதில் காலமானார்.
பாஜக தலைவர்களில் மட்டுமில்லாமல் அரசியல் உலகிலேயே அதிகம் மதிக்கக் கூடிய பெண் தலைவர்களில் ஒருவராக வலம் வந்தவர் சுஷ்மா சுவராஜ்.
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இவர், ஆர்எஸ்எஸ் பாரம்பரியத்தில் வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரின் அப்பா சிறு வயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருந்தவர். சுஷ்மாவின் குடும்பத்தினர் தற்போது பாகிஸ்தானில் இருக்கும் லாகூரில் இருந்து, தேசப் பிரிவினையின் போது இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தவர்கள். இவர் சமஸ்கிருதம் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் பிரிவுகளில் பட்டம் பெற்றார். சட்டமும் பயின்றுள்ளார்.
1973ல் இருந்து உச்ச நீதிமன்றத்தில் சுஷ்மா வழக்கறிஞராக பணியாற்றி இருக்கிறார். 1970ல் இவர் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் என்ற மாணவர் அமைப்பில் சேர்ந்தார். அரசியலில் சிறிது சிறிதாக தனக்கென தனி பாதையை உருவாக்கினார்.
எமெர்ஜென்சி கால கட்டத்தில் முழுதாக அரசியலில் குதித்தார். பின்னர் பாஜக.,வின் தொடக்க காலம் முதலே இணைந்தார். பாஜகவில் அரசியல் ரீதியாக வளர்ந்த இவர் ஹரியானா சட்டசபையில் 1977ல் இருந்து 1982 வரை எம்எல்ஏ.,வாகவும் இருந்தார். தொடர்ந்து, 1987 முதல் 1990 வரை எம்எல்ஏவாக இருந்தார்.
1977ல் ஹரியானாவில் அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 1979ல் ஹரியானா மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றார். இத்தனை சாதனைகளையும் பெண்ணாக இருந்து கொண்டு, மாணவர் அமைப்பின் தலைவராக இருந்து வந்து, 27 வயதில் நிகழ்த்திய சாதனைகள் இவை.
1978-1990 வரை அம்மாநிலத்தில் சுஷ்மா ஸ்வராஜ், கல்வித்துறை அமைச்சராக இருந்துள்ளார். பின் 1998ல் இருந்து தில்லியின் முதல் பெண் முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால் உடனே அவர் அந்தப் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு தேசிய அரசியலுக்கு திரும்பினார்.
1990இல் இவர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1998ல் இருந்து இவர் பல்வேறு துறைகளுக்கு அமைச்சராக இருந்துள்ளார்.
ஹரியானவைச் சேர்ந்தவர் என்றாலும், கர்நாடகாவில் பெல்லாரி தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டுள்ளார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை எதிர்த்து நின்று தோல்வி அடைந்தார்.
தகவல் தொடர்பு துறை, தொலைத்தொடர்பு துறை, சுகாதாரத்துறை, குடும்பம் நலத்துறை என பல துறைகளில் அமைச்சராக இருந்துள்ளார். இவர் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நேரத்தில்தான் போபால், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சட்டிஸ்கர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகளை அமைத்தார்.
2009இல் வாஜ்பாய் இல்லாமல் மக்களவைத் தேர்தலில் பாஜக., தோல்வியை சந்தித்த போது, இவர் எதிர்கட்சித் தலைவராக இருந்தார். கடந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது, பல்வேறு தரப்பினருக்கும் ஓடி ஓடி உதவினார். டிவிட்டர் மூலம் எளிதாக கோடிக்கணக்கான மக்களுக்கு அவசர காலத்தில் உதவினார். எளியோரின் அமைச்சர் என்ற பெயரைப் பெற்றார்.
இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப் பட்ட சுஷ்மா ஸ்வராஜ், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். வெளியுறவுத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி பிரதமர் மோடியின் நம்பிக்கைக்கு உரிய மதிப்பு மிகு அமைச்சராக இருந்த போதும், தமது உடல் நலனைக் காரணம் காட்டி, மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தவிர்த்தார். இருப்பினும், மகத்தான வெற்றி பெற்ற பின்பும், அவரை இந்த முறையும் அமைச்சரவையில் சேர்க்க பிரதமர் மோடி முயற்சி செய்த போது, அதையும் மறுத்தார் சுஷ்மா ஸ்வராஜ்.
நேற்று இரவு அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தில்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் மருத்துவ சிகிச்சைகளுக்கு அவரது உடல் ஒத்துழைக்காத நிலையில், அவர் மரணம் அடைந்தார். ஒரு மகத்தான மனிதநேயத் தலைவராகத் திகழ்ந்த சுஷ்மா ஸ்வராஜுக்கு அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, அவரால் பலன் பெற்ற சாமானியர்கள் மட்டுமின்றி, நல்லுள்ளம் படைத்த நாட்டு மக்கள் அனைவருமே தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.