ஷோபியன் மாவட்டத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளூர் மக்களுடன் உரையாடுவதும் அவர்களுடன் மதிய உணவு சாப்பிடுவதுமான படங்கள் வெளியாகி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இயல்பு நிலைக்குத் திரும்புவது குறித்த செய்தி நாட்டுக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது .
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் தற்காலிகமாக நடைமுறையில் இருந்த 370 வது பிரிவை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டது. மேலும், காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் இந்திய அரசு முடிவு செய்ததையடுத்து, மாநிலத்தில் பதற்ற நிலை ஏற்படும் என்று எதிர்பார்க்கப் பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.
இந்நிலையில், காஷ்மீரில் அமைதி திரும்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவது தொடர்பான வீடியோக்கள் படங்கள், இணையத்தில் சுற்றி வருகின்றன. அதில் அஜித் தோவல் ஷோபியனின் தெருக்களில் சுற்றித் திரிவதையும், உணவை உண்பதையும், உள்ளூர் மக்களுடன் அவர்களின் கருத்துகளைக் கேட்பதையும் அந்தப் படங்கள், வீடியோக்கள் உணர்த்தியுள்ளன.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமையைப் பற்றி அறிய ஷோபியனில் இருந்தார். டிஜிபி தில்பாக் சிங் முன்னிலையில் ஷோபியனில் பாதுகாப்புப் படையினரையும் சந்தித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் புதிய நிர்வாகக் கட்டமைப்புக்கு அதிகாரத்தையும் பொறுப்புகளையும் சுமுகமாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல் காஷ்மீரில் தங்கியுள்ளார். 370 வது பிரிவின் கீழ் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும் தீர்மானத்திற்கும், ஜம்மு-காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்று முன்மொழியப்பட்ட மசோதாவுக்கும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்த மறு நாளே, அவர் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடத் தொடங்கிவிட்டார்.
மேலும் லடாக் பகுதிக்குச் சென்று வந்த அஜித் தோவல், செவ்வாய்க்கிழமை மாலை ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து மாநிலத்தின் நிலைமை மற்றும் எந்தவிதமான விரும்பத்தகாத சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான தயார்நிலை குறித்தும் விவாதித்தார்.