என்ன செய்யும் சந்திரதோஷம்?
எந்த ஜாதகமாக இருந்தாலும் சூரியனுக்கு அடுத்தப்படியாக சந்திரன் முக்கிய கிரகமாக வருகிறார். தேக சுகத்தையும் தேகநலத்தையும் குறிப்பவர். லக்னத்திற்கு அடுத்தப்படியாக, இவர் இருக்கும் இடத்திற்கு சந்திரா லக்னம் என்ற அமைப்பைப் பெறுகிறார்.
ஜாதகத்தில் எந்த யோகத்தை பெற வேண்டுமனாலும் சந்திரனை மையப்படுத்தியே வரும். லக்னபாவத்தின் வழியாக வரும் யோகத்தைவிட, சந்திரன் வழியாக வரும் யோகத்தின் வலு மற்றும் பலம் அதிகம். அதோடு மனோகாரகன் என்ற பெயரும் பெறுகிறார். ஒருவரின் மனோநிலையை குறிப்பவர். அதோடு பத்துமாதம் சுமந்து, பெற்றெடுத்து, பேணிக்காத்து, வளர்த்து, இப்பூலகில் நாமும் மனிதனாக நடமாட முடிகிறது என்றால் அதற்கு தாயே காரணகர்த்தா.
அந்த தாய்கிரகம் சந்திரன். அதனால் மாதுர்காரகன் என்று போற்றப்படுகிறார். ஒரு ஜாதகத்தில் சந்திரன் நல்ல நிலை பெறாவிட்டால், நல்லோர் சேர்க்கை பெறாவிட்டால், ஜாதகர் குழப்பவாதியாக காட்சியளிப்பார். எந்த காரியத்தைத் தொட்டாலும் சந்தேகமும், அவநம்பிக்கையும் தலைதூக்கும். அதனால் உறுதியான செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ள முடியாது.
சந்திரன் நீச்சம் பெற்றிருந்து, வக்கிரம் பெற்ற கிரகத்தின் பார்வை சேர்க்கை பெற்றிருந்தால், மனநிலை பாதிக்கப்பட்டு சித்தசுவாதீனம் ஏற்படவும் வாய்ப்புண்டு. மற்றும் தோல் மற்றும் குடல் வியாதிகள் வர சந்திரனே காரணம். சூரியன் வலது கண்ணை குறிக்க, சந்திரன் இடது கண்ணை குறிக்கிறார்.
கடல் கடந்த பயணம் ஏற்பட சந்திரனே காரணம். மேலும் சந்தோஷம், அழகு, ஆற்றல், அறிவு, திடசித்தம், சுபபோகம் என்று நீளமான பட்டியலுக்கு உரியவர். இவர் ஜாதகத்தில் நீச்சம் பெற்றிருந்தாலோ, ராகு கேதுவுடன் கூடி இருந்தாலோ, செவ்வாயின் பார்வையில் இருந்தாலோ சந்திரனின் இயற்கை பலன்கள் மாறும்.
அதாவது தாய்வழி உறவுகளால் ஏற்படும் பிரச்சனைகள், உறவுகளுக்கிடையே ஏற்படும் ஒற்றுமைக் குறைவுக்கு காரணமாக அமைந்து விடும். தாயின் ஆரோக்கியம் அடிக்கடி பாதிக்கப்படுதல், தாய்வழி சொத்துக்களில் இழுபறி, பதவி, புகழ், கல்வி உயர்வுகளில் தடை போன்ற பாதிப்புகள் தோன்றலாம்.
சந்திர தோஷத்தில் இருந்து உங்களை பாதுகாப்பது எப்படி?
உங்களுக்கு சந்திரதோஷம் இருந்தால் திங்கட்கிழமைகளில் சூரியோதயத்தின் போது உங்கள் வீட்டு பூஜையறையில் 5 அகல்தீபம் பசுநெய் விட்டு ஏற்றி வையுங்கள். அருகில் உள்ள அம்மன் ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெறும் அன்னதானம் அல்லது நிவேதனத்திற்கு இயன்ற அளவு பச்சரிசி வாங்கிக் கொடுங்கள்.
பெண்களாயின் முத்து மாலைகள் அணியலாம். கையில் முத்து மோதிரம் அணிந்து கொள்ளலாம். ஆண்களாக இருந்தால் 10 கேரட்டுக்கு குறையாமல் மூன்ஸ்டோன் கற்கள் பதித்த டாலரை கழுத்தில் அணிந்து கொள்ளலாம். பவுர்ணமி நாளில் கிரிவலம் செல்லுங்கள். சந்திரதோஷம் விலகும்.
நிறம் : வெண்மை
ஜாதி : வைசியன்
வடிவம் : குள்ளம்
மனித அவயம் : முகம், வயிறு
உலோகம : ஈயம்
ரத்தினம் : முத்து
வஸ்திரம் : வெண்மை
சமித்துக்கள் : முருக்கு
தூபதீபம் : சாம்பிராணி
மலர் : வெள்ளலரி
தாணியம் : பச்சரிசி (நெல்)
திசை : வடமேற்கு (வாயுமூலை)
அதிதேவதை : பார்வதி
ஆட்சிவீடு : கடகம்
உச்சவீடு : ரிஷபம்
நீச்சவீடு : விருச்சிகம்
பெயர்ச்சிகாலம் : இரண்டேகால் நாள்
நட்சத்திரங்கள் : ரோகிணி, ஹஸ்தம், திருணோனம்
உபகிரகம் : பரிவேடன்
வேறுபெயர்கள் : பிறை, இந்து, சசி, சோமன், அம்புலி, திங்கள், கேழவன்
சந்திரன் மூலமந்திரம்.
ததிசங்க துஷாராபம்
ஷீரோ தார்ணவ ஸம்பவம்
நாமம் சசிநம் ஸோமம்
சம்போர் மகுட பூஷணம்