பிரதமர் நரேந்திர மோடிக்குப் பின்னர் எங்களுடன் இணைந்துள்ளார் ரஜினிகாந்த் என்று பெருமிதத்துடன் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் பியர் க்ரில்ஸ்.
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலக புகழ் பெற்றது. இந்த நிகழ்ச்சியின் நாயகன் பியர் கிரில்ஸ், அடர்ந்த வனப்பகுதியில் ஆபத்தான சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கிருந்து எப்படி தப்பித்து வருவது என்பது குறித்து மக்களுக்கு கற்றுத் தருகிறார்.
உத்தராகண்ட் மாநிலம் ஜிம் கார்பெட் தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி, வனவிலங்கு பாதுகாப்பை மையக்கருத்தாக கொண்டு, பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் பியர் கிரில்சுடன் இணைந்து பங்கேற்ற ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தியாவில் இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடி கலந்து கொண்டதன் மூலம் மிகப் பிரபலம் அடைந்தது. அப்போது மோடி இயற்கையுடன் ஒன்றிய வாழ்க்கை குறித்து மக்களுக்கு எடுத்துக் கூறினார்.
தற்போது இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டிருக்கிறார். கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள பந்திபுரா புலிகள் காப்பகத்தில் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நடந்துவருகிறது.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பியர் கிரில்ஸ், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சிக்குப் பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் எங்களுடன் அடுத்த நிகழ்ச்சியில் இணைந்திருக்கிறார். நரேந்திர மோடி பங்கேற்ற நிகழ்ச்சி தொலைக்காட்சி வரலாற்றில் பெரும் வரலாற்றைப் படைத்தது. (360 கோடி பார்வைகள்) ரஜினிகாந்த் தற்போதைய நிகழ்ச்சியின் மூலம், முதல் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்… என்று தெரிவித்துள்ளார்.