விடாது கருப்பு -என்பது போல், முரசொலி விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்த முறை, அரசியலில் இருந்து விலகத் தயாரா என்று கேட்டிருக்கிறார் பாமக., நிறுவுனர் ராமதாஸ்!
முரசொலி அலுவலக கட்டடம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று புகார்கள் கூறப் பட்ட நிலையில், இது தொடர்பாக விசாரித்து வரும் தேசிய தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தில், திமுக., தரப்பு, அது வாடகைக் கட்டடத்தில் இருக்கிறது என்று கூறியதால், மீண்டும் பிரச்னை எழுந்துள்ளது.
இத்தனை நாட்கள் வாய்தா கேட்டதே, போலியான ஆவணங்களைத் தயார் செய்வதற்கான கால அவகாசத்தைப் பெறுவதற்குதான் என்று கருத்துகள் கூறப் பட்டு வருகின்றன. இந்நிலையில், பாமக., நிறுவுனர் ராமதாஸ், தன் பங்குக்கு சில கேள்விகளை எழுப்பியுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் எழுப்பியுள்ள கேள்விகள்:
முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் இயங்குகிறதாமே…. அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா? என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம் போல் வெற்றுச் சவடால் தானா?
அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி… முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசி விட்டு, இப்போது நாங்களே வாடகைக்கு தான் இருக்கிறோம் என்று சரண் அடைந்தது தான்?
முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டிடத்தில் தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத் தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா?
அகில இந்தியாவில் மட்டுமல்ல…. ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டிடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்குத் தொடர்ந்த ஒரே கம்பெனி…. நம்ம முரசொலி கம்பெனி தான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது!