ஆஹா அரசு பள்ளி, அய்யோ தனியார் பள்ளி..!
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமென்றால், புதியதாக தொடங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கக்கூடாது என்கிறார், தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே. இளமாறன்.
ஆண்டுக்கு 1.25 இலட்சம் மாணவர்களை தனியார் பள்ளிகளை நோக்கி தள்ளிவிட்டு, ”அரசுபள்ளிகளில் மாணவர்களில்லை; அதனால் பள்ளிகளை மூடுகிறோம்” என்பது எவ்வகையில் நியாயம் எனக் கேள்வி எழுப்புகிறார். அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசே முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெற்று மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்த்துவிடுவதோடு, அவர்களுக்கான கல்விக் கட்டணங்களாக ரூ100 கோடிக்கும் மேலாக தனியார் பள்ளிகளுக்கு தாரை வார்த்திருக்கிறது, தமிழக அரசு என்று குற்றஞ்சுமத்துகிறார்.
போதிய அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3,000-க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டு அங்கு பயிலும் மாணவர்களை அரசுப்பள்ளிகளில் சேர்த்து கல்வி தொடர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சுட்டிக் காட்டுகிறார் இளமாறன்